மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் மாணவர் தினவிழா நடைப்பெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “காமராஜர் அவர்களின் எண்ணப்படி அவரின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமையவிருக்கும் நூலகத்தில் உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களும், கணினியும் இடம்பெற வேண்டும் என முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் விரும்புகின்றனர். புதுவையில் உள்ள மாணவர்கள் ஏற்கனவே அறிவாளிகள். இந்த மணிமண்டபம் அவர்களை மேலும் அறிவாளிகளாக மாற்ற உதவும். சரித்திரம் சில நேரங்களில் நல்ல பக்கங்களை எழுதும். அதில் ஒன்றுதான் காமராஜர் பிறந்தநாள். காமராஜரை பார்த்து வளர்ந்த நானும், அரசியலில் அவரை பின்பற்றும் முதலமைச்சர் ரங்கசாமியும் உயர்ந்த பதவியில் இருந்து புதுவை மக்களுக்கு சேவையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது.
என் தந்தை குமரி அனந்தனுடன் காமராஜர் வீட்டு வாசலில் பலமுறை காத்திருந்துள்ளேன். காமராஜர் வீட்டு வாசலில் நான் காத்திருந்ததுதான் அரசியலுக்கு வர எனக்கு ஊக்கமளித்தது. பிரதமர் நரேந்திரமோடி புதிய கல்வி கொள்கையை தேசிய கல்வி கொள்கையாக அறிவித்துள்ளார். இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விகொள்கை மாணவர்களுக்கு கல்வியுடன், ஊட்டச்சத்தையும் அளிக்க வலியுறுத்துகிறது. காமராஜர் என்றாலே கல்விதான் நினைவுக்கு வரும். புதுவை மாணவர்கள் நன்றாக படித்து பெருமை சேர்ப்பதுதான் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும். இந்த கல்வி வளாகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்கும்” என்றார்.