தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதியதாக தொடங்கப்படுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தை பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து தி.மு.க மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. தி.மு.கவின் அராஜகப் போக்கு அதிகமாகி விட்டது. பா.ஜ.க-வின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர்களின் ஊழல்களை ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தி வருகிறார்.
ஆகையினால், எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கலாம். கடந்த 2011-ம் ஆண்டு மின்வெட்டு பிரச்னை காரணமாகவே தி.மு.க ஆட்சியை இழந்தது. அதன்பிறகு அ.தி.மு.க ஆட்சியில் பெரிய அளவில் மின்வெட்டு ஏதும் இல்லை. தற்போதைய தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நிலவும் மின்வெட்டுக்கு ஊழல்தான் காரணம்.
தி.மு.கவின் மாநில மகளிரணிச் செயலாளரும் இந்த தொகுதியின் எம்.பியுமான கனிமொழி இருக்கும் இந்த மாவட்டத்தில் எரல் பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர்களின் போராட்டத்தினால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இனியும் இருக்காது” என்றார்.