பிகாரில் ஆசிரியர் தாக்கியதில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த டியூசன் மையத்தில் ஆசிரியராக இருக்கும் சோட்டு என்பவர் இன்று காலை பணியில் இருந்தார். அனைவரையும் படிக்குமாறு கூறிவிட்டு அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது 5 வயது சிறுவன் ஒருவன், படிக்காமல் பக்கத்தில் இருந்த மற்றொரு சிறுவனிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சோட்டு, அந்த சிறுவனை தான் கையில் வைத்திருந்த பிரம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். ஒருகட்டத்தில் பிரம்பு இரண்டாக உடைந்தது. எனினும், விடாமல் தனது கைகளால் அந்த சிறுவனின் முகத்தில் அவர் குத்தியுள்ளார். இதனால் சிறுவன் சுயநினைவை இழந்து மயக்கமடைந்தான்.

image

இதையடுத்து அங்கிருந்த மாணவர்கள் பயத்தில் கூச்சலிடவே, அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு வந்து, மயக்கமடைந்திருந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், ஆசிரியர் சோட்டுவையும் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை ஆசிரியர் சோட்டு தாக்கும் வீடியோவை அங்கிருந்த ஒரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டான். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆசிரியரின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு அனைத்து தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.