இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “வெளிநாட்டில் காந்தி, இந்தியாவில் கோட்சே என்பது தான் பா.ஜ.க அரசின் கொள்கை” என்று விமர்சித்திருக்கிறார்.
பிரபல தனியார் ஊடகத்துக்கு இன்று பேட்டியளித்த சீதாராம் யெச்சூரி, இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த அமெரிக்க குழுவின் அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது குறித்து பேசியபோது, “நாட்டை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வெளிநாட்டு அறிக்கைகளையும் மத்திய அரசு நிராகரிக்கிறது.
நாட்டில் அரசியலமைப்பால் வழங்கப்பட்ட மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் உத்தரவாத உரிமைகள் அனைத்தையும் இந்த அரசாங்கம் நசுக்குகிறது. ஒருபுறம் நம் நாட்டில் ஜனநாயகம் உள்ளது என்று அனைவருக்கும் சொல்ல விரும்பும் இவர்களே, மறுபுறம் நாட்டிலுள்ள ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறார்கள். வெளிநாட்டில் காந்தியும், இந்தியாவில் கோட்சேவும்தான் பா.ஜ.க அரசின் கொள்கை” என பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தார்.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமானது (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனை மத்திய அரசு நிராகரித்தது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்-ன் கருத்துகள் இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பு, பன்மைத்தன்மை மற்றும் அதன் ஜனநாயக நெறிமுறைகள் பற்றிய கடுமையான புரிதலின் பற்றாக்குறையைப் பிரதிபலிக்கின்றன” என நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் சீதாராம் யெச்சூரியிடமிருந்து இத்தகைய கருத்துகள் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.