சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் ‘பேரன்ட்டீனிங்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள்.

பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன.

பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

டாக்டர் ஷர்மிளா – ஆஷ்லி

டாக்டர் ஷர்மிளா

உங்கள் உலகமே உங்கள் குழந்தைதான் என நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்… அந்நிலையில் நீங்கள் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்கு உங்கள் குழந்தை உங்களிடம் ஒரு பொய்யைச் சொன்னது தெரியவந்தால் எப்படி உடைந்துபோவீர்கள்? ‘இத்தனை நாளா இல்லாத இந்தப் பழக்கம் இனிமே தொடர்கதையாகிடுமோ’ என்று பயப்படுவீர்கள்தானே… உங்களுடைய அந்த பயம் தேவையற்றது. உங்களுடைய பதின்வயது மகனோ, மகளோ பொய் சொல்கிறார் என்றால் அது அவர்களது சுதந்திரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம்.

தன்னை பற்றிய இமேஜை உருவாக்கும் முயற்சியாகவும் அவர்கள் அப்படிச் செய்யலாம். இதுபோன்ற பொய்களை அவர்கள் பெற்றோர்களைவிடவும் சக வயதுப் பிள்ளைகளிடமே அதிகம் சொல்வது வழக்கம். உண்மை தெரிந்தால் பெற்றோர்களாகிய நீங்கள் வருத்தப்படுவீர்கள் அல்லது ஏமாந்துபோவீர்கள் என்ற காரணத்துக்காகவும் பிள்ளைகள் பொய் சொல்லலாம்.

குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும்போது, பதற்றமாகும்போது, தனிமைப்படுத்தப்படும்போது, மற்றவர்களால் கிண்டல், கேலிக்குள்ளாகும்போதெல்லாம் பிள்ளைகள் பொய் சொல்லப் பழகுகிறார்கள். பிள்ளைகள் பொய் சொல்கிறார்களே என்று பதறுவதைவிடவும் அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதன் உளவியலைத் தெரிந்து அவர்களை அணுக வேண்டியது பெற்றோரின் கடமை.

பிள்ளைகள் ஏன் பொய் சொல்கிறார்கள்?

  • தங்கள் தோல்விகளோ, செயல்களோ பெற்றோருக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கக்கூடாது என்பதற்காக

  • பிரச்னைகளிலிருந்து தப்பிக்க

  • அவர்கள் செய்த ஏதோ ஓர் ஏடாகூட செயல் அடுத்தவர்களுக்குத் தெரிந்தால் தங்களை முட்டாளாக நினைக்கக்கூடுமோ என்ற எண்ணத்தில்

  • பிரச்னைகளில் சிக்கிக்கொண்ட தங்களுடைய நண்பர்களைக் காப்பாற்ற

  • உணர்வுகளை மறைக்க… அதாவது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அவர்கள் மற்றவர்கள் பார்வையில் பக்குவமற்ற, நிதானமற்றவர்களாகத் தெரிந்துவிடுவார்களோ என்ற பயத்தில்

  • மற்றவர்களின் அபிமானத்தைப் பெற

  • தங்களுடைய சுதந்திரத்தை உறுதிப்படுத்த

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பிள்ளைகள் பொய் சொல்கிறார்களா என்று கவனிக்க வேண்டியது அவசியம். அப்படிச் சொல்வது தெரிந்தால் அது தொடர்கிறதா என்று பார்க்க வேண்டும். ஏதோ தெரியாமல் பொய் சொல்லிவிட்டாள்(ன்) என்று அலட்சியமாக இருந்தால், அது தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நீங்கள் கவனிப்பது தெரிந்தும் பிள்ளைகள் பொய் பேசுவதைத் தொடரும்போது நீங்கள் செய்ய வேண்டியவை….

  • நேர்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள். கற்றுக்கொடுப்பதோடு நிற்காமல், அதே போல அவர்களுக்கு வாழ்ந்து காட்டுங்கள்.

  • அவர்கள் பொய் சொன்னதைக் கண்டுபிடித்ததும் அது குறித்து அமைதியாக விசாரியுங்கள். ஏன் பொய் சொன்னார்கள் என்று காரணம் கேளுங்கள்.

  • பொய் சொல்வது தவறு என்பதை உங்கள் குடும்ப விதியாக மாற்றுங்கள். அது மீறப்படும்போது யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்பதை மனதில் பதியவையுங்கள்.

  • பிள்ளைகள் சொல்லும், சொன்ன பொய்களுக்கு அவர்களையே பொறுப்பேற்க பழக்குங்கள். அவர்கள் சொன்ன பொய், அடுத்தவரை காயப்படுத்தியிருந்தாலோ, கஷ்டப்படுத்தியிருந்தாலோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.

டேம் ஹோம் மெசேஜ்

பிள்ளைகளின் ஒவ்வொரு செயலையும் நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று புரியவையுங்கள். நேர்மையைக் கற்றுக்கொடுக்கிறேன் என்ற பெயரில் பிள்ளைகளுக்கு லெக்சர் கொடுக்காதீர்கள். பொய் சொன்னது குறித்து விசாரிக்கும்போது உங்கள் குரலை உயர்த்த வேண்டாம். பிள்ளைகளை ‘ஃபிராடு’, ‘லையர்’ என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வைத்து அழைக்காதீர்கள். அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதோ, மனதைக் காயப்படுத்துவதோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வாகாது. மாறாக அவர்கள் பொய் சொல்லும் பழக்கத்தைத் தொடரவே காரணமாகும்.

ஆஷ்லி

”பொய் சொன்ன அனுபவமும், அதற்காக பெற்றோரிடம் மாட்டிக்கொண்ட அனுபவமும் எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கும். எனக்கும் உண்டு.

சில விஷயங்களில் என் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். உதாரணத்துக்கு நான் எப்படிப்பட்ட ஃபிரெண்ட்ஸுடன் பழக வேண்டும் என்பதை அவர் அறிவுறுத்துவார். ‘நான் யார்கூட ஃபிரெண்டா இருக்கணும், யார்கூட பழகக்கூடாதுன்னு நீங்க எப்படிம்மா முடிவு பண்ண முடியும்’ என எனக்கு கோபம் தலைக்கேறும். வேறு வழியில்லாமல் என் ஃபிரெண்ட்ஸ் யார் என்பதை அம்மாவிடமிருந்து மறைக்க ஆரம்பித்தேன்.

பாய்ஸ்… கேர்ள்ஸ்… பேரன்ட்ஸ்

வாட்ஸ்ஆப்பிலும் இன்ஸ்டாவிலும் யாருடன் ஃபிரெண்டாக இருக்கிறேன் என்பதை அம்மாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தேன். அது தெரிந்தால் அம்மா என்னைத் திட்டுவார், தண்டனை தருவார் என்ற பயமும் இருந்தது. யாருடன் பழக வேண்டாம் என அம்மா சொன்னாரோ, அவர்கள் ஒரு கட்டத்தில் சுயரூபத்தைக் காட்ட, அப்போதுதான் அம்மாவின் அட்வைஸ் எனக்குப் புரிந்தது. டீன் ஏஜில் இப்படி சில விஷயங்களில் அனுபவப்பட்டு, அடிபட்டுதான் பெற்றோரின் பேச்சின் அருமையைப் புரிந்துகொள்கிறோம் நாங்கள்.

பிள்ளைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் தங்களிடம் பேசலாம் என்ற நம்பிக்கை, ஏதேனும் தவறு செய்தாலும் அதற்காக பிள்ளைகளை ஜட்ஜ் செய்யாமல், தண்டனை கொடுக்காமல் ஏற்றுக்கொள்வது – இந்த இரண்டும் பெற்றோர் தரப்பிலிருந்து பிள்ளைகளுக்கு உறுதிசெய்யப்பட்டால் பிள்ளைகள் பொய் சொல்லும் தேவை ஏற்படாது என்பது என் எண்ணம்.”

– ஹேப்பி பேரன்ட்டீனிங்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.