ஆஸ்திரேலியாவை சேர்ந்த தம்பதியொருவருக்கு, எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் முக அமைப்புடன் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் இது ஒருவகை அரிதான பிறவி குறைபாடு என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இக்குழந்தையின் சிரித்த முகம்தான், இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ள பாசிட்டிவ் வைப்!
குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் சிரித்த முகத்துடன் இருக்கும் குழந்தையை நம்மால் எப்படி புன்னகைக்காமல் கடக்க முடியும்? குழந்தை அய்லா, அப்படியான ஒரு குழந்தைதான். அவரை பார்த்தால், நம்மால் புன்னகைக்காமல் கடக்க முடியாது. அந்த அளவுக்கு வசீகரமாக சிரிக்கும் அய்லாவுக்கு, சிரிப்புதான் பிரச்னையே. இவர் அழுதாலும் சிரித்துக்கொண்டேதான் அழுவார், சண்டையிட்டாலும் சிரித்துக்கொண்டேதான் சண்டையிடுவார். அந்த அளவுக்கு அவருடைய முகத்தில் நீங்காத புன்னகை எப்போதுமே இருக்கும். காரணம், பைலேட்டரல் மைக்ரோஸ்டோமியா (bilateral microstomia).
பைலேட்டரல் மைக்ரோஸ்டோமியா என்பது மிக மிக அரிதாக வாய் மற்றும் அதன் செயல்பாடுகளில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. இந்தக் குறைபாடு இருப்போரின் வாய், எப்போதும் சிரித்தது போன்ற அமைப்பிலேயே இருக்கும். அய்லா என்ற பெயரிடப்பெற்றிருக்கும் அந்தக் குழந்தையின் தந்தை பெயர் க்ரிஸ்டினா வெர்ச்சர் (வயது 21); தாய் பெயர் ப்ளாசி முசா (வயது 20). குழந்தை அய்லா, கருவிலிருந்தபோதே அவருக்கு இந்த குறைபாடு ஏற்பட்டிருந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இக்குழந்தை கடந்த டிசம்பர் 2021-ல் பிறந்திருக்கிறார்.
குழந்தையின் தாய் இதுதொடர்பாக கொடுத்த பேட்டியொன்றில், “எங்களுக்கு இந்த குறைபாடு பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. என் வாழ்வில் நான் இப்படியான குறைபாடுடைய யாரையும் பார்த்ததேயில்லை. குழந்தை பிறந்தபோது, எங்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு சிசேரியன் மூலம் தான் பிரசவம் நடந்தது. சிசேரியனுக்கு செல்லும் வரை, குழந்தையின் இந்த நிலை பற்றி எனக்கு தெரியவில்லை. ஒரு தாயாக நான் எங்கே தவறாக சென்றேன் என தெரியவில்லை. என் கர்ப்பகாலம் முழுவதுமே சற்று பதட்டமாகவே இருந்தேன் என்பதுமட்டும் மறுப்பதற்கில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் இதுபோன்ற அரியவகை குறைபாட்டில் தாயின் தவறோ, பெற்றோரின் தவறோ எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு மருத்துவ ஆய்வில், உலகிலேயே 14 பேருக்கு மட்டுமே இவ்வகை குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த அளவுக்கு மிக அரிய பாதிப்பான இது, எதனால் ஏற்படுகிறதென்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில் குழந்தை அய்லாவின் பெற்ரோர், குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஏதும் செய்து, குழந்தையின் வாய் அமைப்பை சரிசெய்ய முடியுமா என்று மருத்துவக் குழுவுடன் ஆலோசித்து வருகின்றார்கள். குழந்தை வளர்கையில், அவரது வாய் செயல்பாடுகளுக்கு இந்த குறைபாடு தொந்தரவுகளை ஏற்படுத்தாமல் இருக்க, அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளுமாறு மருத்துவர்களும் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றில் இந்த அரியவகை குறைபாடு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க… பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
இணையம் வழியாக பலருக்கும் அனுதினமும் பாசிடிவ் எனர்ஜியை கொடுக்கும் குழந்தை அய்லாவின் சிரிப்பு, அவருடைய பெற்றோருக்கும் அதே திருப்தியையும் மகிழ்ச்சியையும் விரைவில் கொடுக்க நாமும் பிராத்திப்போம்!