31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கிறார் பேரறிவாளன். அற்புதம்மாவின் உறுதியான போராட்டம், சிறையில் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டாலும் அங்கிருந்து தன்னை மேம்படுத்தி சட்டப் போராட்டம் நடத்திய பேரறிவாளனின் வலிமை என்று இந்த விடுதலைக்கு பின்னால் ஏராளமான நெகிழ்ச்சி இருக்கிறது.

பேரறிவாளன், அற்புதம்மாள்

ஆனால், விடுதலை அறிவிப்பு வந்த அந்தத் தருணத்தில் இருந்து மாநிலம் முழுவதும் தங்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு அற்புதம்மாளும், பேரறிவாளனும் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை வந்திருந்த பேரறிவாளனை சந்திக்க சென்றோம்.

தன்னிடம் பேசும் அனைவரிடமும் நிதானமாக, புன்சிரிப்புடன் பதிலளிக்கிறார் பேரறிவாளன். ஒவ்வொருமுறை பொதுவெளியில் தலை காட்டும்போது ரசித்து, நெகிழ்ந்து சுவாசிக்கிறார். காலை முதல் அவர்களை பின்தொடர்ந்து கொண்டிருந்தோம். நண்பகல் நேரம் வழக்கறிஞர் சிவக்குமாரின் சகோதரர் வீட்டுக்கு சென்றார் பேரறிவாளன்.

குழந்தைகளுடன் பேரறிவாளன்

சிறிது நேரம் பெரியவர்களுடன் பேசிவிட்டு, அங்கிருந்த குழந்தைகளுடன் அமர்ந்து கொஞ்சி ஜாலியாக அரட்டை அடைக்கத் தொடங்கினார். பிறகு சிரித்துக் கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“கைது, சிறைவாசம் பெரும்பாலானோருக்கு முதல் அனுபவமா இருக்கும். எனக்கு அது பெரிய அனுபவம். என் முதல் சிறை வாசம் நினைச்சுப் பார்க்க முடியாத வலி, ஆதங்கம், அச்சம், கலக்கத்தையும் கொடுத்துச்சு. பொதுவா நான் யாரையும் திட்ட மாட்டேன். நண்பர்களைக் கூட நான் அடிச்சது இல்ல. சில நேரத்துல நண்பர்கள் கூட விளையாட்டா என்னை அடிச்சுடுவாங்க.

பேரறிவாளன்

இயல்புலயே யாரையும் காயப்படுத்தக் கூடாதுனு வளர்ந்துட்டேன். அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சினு ரொம்பப் பாசமான குடும்பம். பாசம் காட்டியே வளர்ந்தவனை, திடீர்னு சிறைக்குள்ள அடைச்சப்ப தாங்க முடியாத மன அழுத்தத்தையும், விரக்தியையும் கொடுத்துச்சு.

அறம் சார்ந்து வாழ்றது, வாசிப்பு எல்லாத்துக்குமே அடிப்படை அப்பா தான். ஒரு நண்பனைப் போல அப்பாக்கிட்ட நிறைய விவாதம் பண்ணுவேன். அப்பா எனக்காக நிறைய கவிதை எழுதுவார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தப்ப மதுரைல நடந்த மூன்றாம் உலகத்தமிழ் மாநாட்டில் அப்பா கவிதை வாசிச்சுருக்கார்.

அற்புதம்மாள் குயில்தாசன்

பெரிய கவிஞரா வந்துருக்க வேண்டியவர். 1991க்கு அப்பறம், முழுக்க முழுக்க எனக்காக கவிதை எழுத ஆரம்பிச்சுட்டார். அப்பா தான் எனக்கு மு.வ நாவல்களை படிக்க சொன்னார். அது மனசுக்குள்ள ஒரு நேர்மறை சிந்தனையை கொடுத்துச்சு.

ஒரு பொய் வழக்கை போட்டு, மனசாட்சி இல்லாமல் இப்படி தாக்கியுள்ளார்களே என்ற மன வருத்தம் எப்போதும் இருக்கிறது. அது உடல் ரீதியாக நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிலை இன்னொரு நிரபராதிக்கு வரக்கூடாது. ஆரம்பத்துல நீதிமன்றம் அழைத்து செல்வது, சிறை மாற்றுவது போன்ற தருணங்களில்தான் வெளி உலகையே பார்க்க முடியும். 10க்கு9 பரப்பளவில் ஒரு தனி அறை. அதுக்குள்ளேயே கழிவறை இருக்கும்.

சிறை தண்டனை

பகல் நேரத்தில் எப்போதாவது திறந்துவிட்டால் சுற்றி வேலிகளால் சூழப்பட்ட 6 அடி அகலமுள்ள வரண்டாவுக்கு போகலாம். வாரம் ஒரு முறை யாராவது பார்க்க வந்தால், அழைத்து செல்வார்கள். அப்போதும் வேறு யாரையும் பார்க்க முடியாது. அப்போதுதான் நிறைய மன அழுத்தம் வந்தது. அந்த காலகட்டத்தில் தான் புத்தகத்தில் மூழ்கினேன். வாசிப்பும், எழுத்து, பாட்டு பாடுதல் என கழிந்தது அந்த வேதனையான காலம்.”

இந்த நீண்ட சட்டப் போராட்டத்தில் நிறைய முறை தோற்று விழுந்திருக்கிறேன். இதில் இருந்து வெளியே வர நிறைய படிக்க வேண்டும். சட்டம் தெரிந்து கொள்ள வேண்டும். சட்ட அறிஞர்களை கண்டறிய வேண்டும் என்ற அறிவு எல்லாம் வருவதற்குள் 20 ஆண்டுகள் ஓடிவிட்டன.”

பேரறிவாளன்

என்று பேரறிவாளன் பேசிக் கொண்டிருக்கும்போது சாரல் மழையும், சுளீர் வெயிலும் என வானிலை மாறி கொண்டே இருந்தது. அதேபோல பேரறிவாளன் நினைவுகளில் சிறை வலிகளும், விடுதலை நெகிழ்ச்சியும் மாறி மாறி நிழலாடின.

“எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் என்று தான் யோசித்தேன். கடந்த 12 ஆண்டுகளாக நான் சட்டத்தோடு மட்டும் தான் வாழ்ந்திருக்கிறேன். இன்று தமிழ்நாடு முழுவதும் என் அம்மாவுடன் நிற்கிறார்கள். ஆரம்பத்தில் அம்மாவையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை. அம்மாவை இப்படி சங்கடபடுத்திகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். அவ்வளவு சங்கடங்களை கடந்து நிற்கிறோம் என்றால், அம்மாவின் மன வலிமை தான் காரணம்.

அற்புதம்மாள் பேரறிவாளன்

யார் என்ன சொன்னாலும் என் மகன் நிரபராதி என்பதில் அம்மா உறுதியாக இருந்தார். அவர் பட்ட வேதனைகளை பார்த்துதான், நான் ஜெயிக்க வேண்டும் என்பதை விட, அம்மா ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆரம்ப காலகட்டத்தில் பட்ட அவமானங்களுக்கு மருந்து கொடுக்கு வேண்டும் என்று யோசித்தேன். என் விடுதலை செய்திதான் அவருக்கான மருந்து.

மரண தண்டனையை எப்படி எதிர்கொண்டீர்கள் என நிறைய பேர் கேட்கிறார்கள். அப்போதும் கைக் கொடுத்தது வள்ளுவன் தான்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. (திருக்குறள்)

தூக்கு தண்டனை

இன்னிக்கு நீ செத்துப்போவன்னு வாழ்க்கைல எனக்கு 3 முறை தேதி குறிச்சாங்க. நேற்று இருந்தவன் இன்றில்லை என்கிற நிலையாமையைப் பற்றி நான் படித்திருக்கிறேன். வள்ளுவரின் ஒவ்வொரு சொல்லுக்குமான பொருளைத் தேடி இரவு பகலாக சிந்திப்பேன். அது இயல்பு என்று புரிந்துவிட்ட பிறகு, கலங்கி நிற்காமல் உறுதியாக போராடத் தொடங்கினேன்.” என்றார்.

விடுதலைக்குப் பிறகு, ராஜிவ் காந்தி கொலை வழக்கு குறித்து எங்கும் பெரிதாக பேசாத பேரறிவாளன், முதல்முறையாக ஆனந்த விகடனிடம் மனம் திறந்திருக்கிறார் அது அடுத்த பாகத்தில்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.