அமெரிக்காவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் அமெரிக்க பள்ளிகளில் நிகழும் 27ஆவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள உவால்டேயில் ரோப்(Robb) என்ற தொடக்கப்பள்ளிக்குள், கையில் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர், குழந்தைகள் என்றும் பாராமல் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். இதில் 19 குழந்தைகள் மற்றும் மூன்று ஆசிரியர் உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் 18 வயதான இளைஞர் என்றும், பதில் தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் மாணவராக இருந்ததாகவும், பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிற்கு தைரியம் உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் 215 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பள்ளிகளில் நடக்கும் 27ஆவது துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ள தகவல் அதிர வைப்பதாக உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு இதேபோல ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.