பிரேசிலில் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி நூறு வயது முதியவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இன்றைய அவசர யுகத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது என்பது தனியார் துறைகளில் பணியாற்றும் பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து வருகிறது. அப்படியிருந்தும் பிரேசிலில் நூறு வயதை தொட்ட நபர் 84 ஆண்டுகளாக வேறு நிறுவனத்திற்கு மாறாமல், ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக பணியை தொடங்கிய வால்டர் ஆர்த்மன் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார் ஆணித்தரமாக. அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் தீவிர கவனம் செலுத்துவது அவசியம் என கூறும் வால்டர், பெரும்பாலும் வயிற்றுக்கு ஒவ்வாத அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் உண்பதை தவிர்த்து விடுவாராம். தவிர, தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவதிலும் தவறுவதில்லையாம்.
கடமையாற்றுவதிலும் கின்னஸ் உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்த வால்டரை தற்போது ஒட்டுமொத்த உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.
இதையும் படிக்க: அரியணையில் 70 ஆண்டுகள் ! ‘பார்பி’ பொம்மை உருவத்தில் எலிசபெத் ராணி