உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து நகரமான ரெஸ்ஸோவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று வருகை தருகிறார்.

உக்ரேனிய எல்லையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெஸ்ஸோவில் ஜோ பைடனை போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா வரவேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாக உக்ரைன் மீது தொடரும் ரஷ்யாவின்  தாக்குதல் மேற்குபகுதிகள் நோக்கி பரவக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வரும் சூழலில் பைடனின் இந்த பயணம் உலக நாடுகளால் கவனிக்கப்படுகிறது.

image

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  உக்ரைன் – ரஷ்யா போரை  “மூன்றாம் உலகப் போர்” என்று அழைத்துள்ள நிலையில், நேட்டோ நட்பு நாடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இந்தப் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஏற்கனவே பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்மூடித்தனமான ஷெல் வீச்சினை நடத்துவதாகவும் உக்ரைன் அரசு  குற்றம் சாட்டியுள்ளது, மேலும், இது போர்க்குற்றம் என்று அமெரிக்காவும் முத்திரை குத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவின் 82வது வான்வழிப் பிரிவின் உறுப்பினர்களை பைடன் சந்திக்கவுள்ளார். இது நேட்டோவின் கிழக்குப் பகுதிகளை அதிக அளவில் பலப்படுத்தும் பிரிவாக உள்ளது.

image

வியாழன் அன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த ஒரு அவசர உச்சிமாநாட்டில் ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியாவிற்கு மேலும் அதிகளவில் படைகளை அனுப்புவதாக நேட்டோ அறிவித்தது, அத்துடன் உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது தாக்குதலை விரிவுபடுத்தும் பட்சத்தில் இரசாயன மற்றும் அணுசக்தி பாதுகாப்புகளை வலுப்படுத்துவதாகவும் அது தெரிவித்தது.

போலந்தில் ஆலோசனை நடத்தும் பைடன், உக்ரைனில் உள்ள மோசமான மனிதாபிமான நிலைமை மற்றும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வெளியேற்றம் தொடர்பான விளக்கத்தை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.