ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 20 ஐ.பி.எல் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த போட்டியின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது. கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஒருவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஒத்திகை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. போட்டி நடக்கவிருக்கும் வான்கடே ஸ்டேடியம், வீரர்கள் தங்க இருக்கும் ஓட்டல் மற்றும் அதனையொட்டிய சாலைகளில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மும்பை போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மும்பை போலீஸார் வான்கடே ஸ்டேடியம், வீரர்கள் தங்க இருக்கும் டிரிடண்ட் ஓட்டல் போன்ற இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஐபிஎல் கோப்பை

இம்மாதம் 26-ம் தேதியிலிருந்து மே 22-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கிரிக்கெட் வீரர்கள், அணியோடு தொடர்புடையவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் மாநில ரிசர்வ் போலீஸ், விரைவுப்படை, வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல் அணிகளின் வீரர்கள் செல்லும் வாகனங்களுகளுடன் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும். ஓட்டலில் வீரர்கள் வந்து செல்ல சிறப்பு வழி ஏற்படுத்தப்படும். பஸ் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் முழுமையாக சோதிக்கப்படுவர். அதோடு போட்டியின் போது இவர்களை மாற்ற அனுமதிக்கப்படாது. வீரர்கள் பார்வையாளர் யாரையாவது சந்திக்க வேண்டுமானால் அணியின் மேலாளரிடம் அனுமதி பெறவேண்டும். ஓட்டல் ஊழியர்கள் அடையாள அட்டை இல்லாமல் வரக்கூடாது என்பன உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மும்பை வான்கடே ஸ்டேடியம் மட்டுமல்லாது டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியம், பிரபோர்னே ஸ்டேடியம், எம்.சி.ஏ.ஸ்டேடியம் புனே போன்ற பகுதிகளிலும் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.