டெல்லி அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் லோகேஷ் பதி. இவர் தந்தை விபத்ராம் பதி. லோகேஷ், தன் தந்தையிடம் சொத்தைத் தன் பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி கேட்டு வந்தார். ஆனால் விபத்ராம் சொத்தைத் தன் மகன் பெயருக்கு எழுதிக்கொடுக்க மறுத்துவந்தார். இதனால் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இந்த நிலையில், விபத்ராம் தன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது வீட்டுக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்து விபத்ராம் கீழே விழுந்தார். அதை நேரில் பார்த்தவர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விபத்ராமை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர். விபத்ராம் மனைவியிடம் இது குறித்து விசாரித்தபோது தன் கணவருக்கும், மகன் லோகேஷுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்துவந்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், லோகேஷும் தலைமறைவானார். அதனால், சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பிடிக்க தீவிரம் காட்டினர். அப்போது, லோகேஷ் ஹூண்டாய் காரில் சுற்றிக்கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் இரவில் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி லோஷைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், தந்தை தன் பெயரில் சொத்தை எழுதிக்கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதையடுத்து, அவரைக் கைதுசெய்து, அவர் பயன்படுத்திய துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர், லோகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். சொத்துக்காக, தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: டெல்லி: 50 இடங்களில் கத்திக்குத்து; இளம்பெண் கொடூரக் கொலை! – கூட்டுப்பாலியல் வன்கொடுமையா?