இந்தியாவில் தினசரி அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலையினால் மக்கள் மின்சார வாகனங்கள் மீது தங்களது பார்வையை திருப்பியுள்ளனர். அதன் காரணமாக உள்நாடு தொடங்கி உலக நாடுகள் வரையிலான மின்சார வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர். இப்போது எலான் மஸ்கின் ‘டெஸ்லா’ நிறுவன வருகையை இந்திய மாநிலங்கள் எதிர்பார்த்திருப்பதே அதற்கு உதாரணம்.
இத்தகைய சூழலில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஐந்து மாநில தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கனவே அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை உயர்வினால் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதனை மீட்டெடுப்பதற்கான தொலைநோக்கு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பிடிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்ப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் ஆட்டோமொபைல் துறைக்கு நம்பிக்கை கொடுத்து வரும் மின்சார வாகன செக்மெண்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (GST) குறைப்பதும் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.