சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்தவர் கோபிநாத் (55). இவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் கடந்த 30.12.2021-ம் தேதி புகார் அளித்தார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் கார் டிரைவராக வேலைப்பார்த்து வருகிறேன். என் மனைவி பெயர் காமாட்சி. அவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். எங்களுக்கு ஒரு மகனும் கற்பகம் (27) என்ற மகளும் உள்ளனர்.
என் மகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்த போது அங்கு வேலை செய்த யோகாநந்தம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 9 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. யோகாநந்தத்துக்கு குடிபழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி என்னுடைய மகளிடம் பிரச்னை செய்தார். அதனால் என் மகள், கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதன்பிறகு பூந்தமல்லியில் உள்ள துணிக்கடையில் என் மகள் வேலைப்பார்த்து வந்தாள். அப்போது அவளோடு வேலை செய்யும் ஒரு பெண்ணின் அண்ணன் ஆகாஷ் என்பவருடன் எனது மகளுக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அதன் மூலம் என் மகள் கர்ப்பம் அடைந்தார். 21.12.2021-ம் தேதி என் மகளுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தன் குழந்தை இல்லை என ஆகாஷ் என் மகளிடம் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அந்தக் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கும்படி ஆகாஷ், என் மகளிடம் கூறியுள்ளார். அதனால் என் மகள் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
Also Read: பொங்கல் பொருள்: `புளியில் பல்லி; தந்தைமீது புகார்!’ – மன உளைச்சலில் மகன் தீக்குளித்துத் தற்கொலை?!
இந்த நிலையில் கடந்த 30.12.2021-ம் தேதி காலை 10 மணியளவில் என் மகள் தன்னுடைய மூத்த மகளை வீட்டில் விட்டு தற்போது பிறந்த குழந்தையோடு தனியாக இன்னொரு வீட்டிலிருந்தார். பின்னர் அம்மாவைப் பார்க்க என் பேத்தி சென்றபோது கதவு பூட்டியிருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. அதனால் நீண்ட நேரத்துக்குப்பிறகு கதவை தட்டினோம். அதன்பிறகு கதவை உடைத்து உள்ளே சென்றபோது புடவையில் என் மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள். எனவே என் மகளின் இறப்பு சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஆகாஷை போலீஸார் இன்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைப் பிறந்து 9-வது நாளில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.