இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணிக்காக வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார் கோலி. இதன் மூலம் சச்சினை பின்னுக்குத் தள்ளி உள்ளார் அவர்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் கோலி 11 ரன்கள் எடுத்த போது சச்சின் வசமிருந்த சாதனையை தகர்த்தார். அதோடு அயலக மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 5100* ரன்களை குவித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லையும் கோலி எட்டியுள்ளார்.
அயலகத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடி சச்சின் 5065, தோனி 4520, டிராவிட் 3998 மற்றும் கங்குலி 3468 ரன்கள் எடுத்துள்ளனர். பால் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 296 ரன்கள் குவித்தது. பின்னர், 297 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.