நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா மூன்றாவது அலை பரவலால் இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்துள்ளது. சமீபத்தில், கமல்ஹாசன், வடிவேலு, அருண் விஜய், கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, மீனா, லதா மங்கேஷ்கர், சோனு நிகாம் உள்ளிட்ட சினிமா துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கேரளாவில் நடிகர் மம்முட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான நடிகர் சுரேஷ் கோபிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து,“எச்சரிக்கையாக இருந்தபோதும் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால், தனிமைப்படுத்திக்கொண்டேன். லேசான காய்ச்சலைத்தவிர நலமாக இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். சமூக விலகலை கண்டிப்பாக கடைப்பிடியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இவரது நடிப்பில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அஜித்தின் ‘தீனா’, ஷங்கரின் ‘ஐ’ உள்ளிட்டப் படங்களில் சுரேஷ் கோபி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.