சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பிரசித்தி பெற்ற களபாபிஷேகம் வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் ‘களபாபிஷேகம்’ வழிபாடு நடைபெற்றது.
ஐயப்பனின் சக்தியை அதிகரிக்க நடத்தப்படும் ‘களபாபிஷேகம்’ பூஜையில் பங்கேற்றால் சர்வ ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம். இதனால் களபாபிஷேகம் பூஜையில் பங்கேற்க ஐயப்ப பக்தர்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் களபாபிஷேகம் பூஜையில் பங்கேற்கும் ஐயப்ப பக்தர் ஒருவருக்கு 22 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ கோயில் முன்புறம் கணபதி ஹோமம் மண்டபத்தில் களபாபிஷேகம் வழிபாடு செய்யும் பக்தர்கள் முன்னிலையில், தந்திரி மற்றும் நம்பூதிரிகள் சந்தனம் மற்றும் குங்குமத்தை தங்கத்தாலான பிரம்ம கலசத்தில் நிறைப்பார்கள்.
பின்னர, உச்ச பூஜைக்கு முன்னோடியாக 11:25 மணி முதல் பகல் 12 மணி வரை களபாபிஷேகம் நடக்கும். இதற்காக பிரம்ம கலசம் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் பவனியாக எடுத்து வரப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நடந்த களபாபிஷேக வழிபாடு, கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் நடக்கும் முதல் களபாபிஷேகம் வழிபாடு இதுவாகும். மகரவிளக்கு பூஜை காலம் முடியும் ஜனவரி 20ஆம் தேதி வரை இந்த களபாபிஷேகம் பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.