வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய ரூ. 6,230 கோடி நிதியை உடனே ஒதுக்கீடு செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனை முழுமையாக ஆய்வு செய்து நிதியை ஒதுக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடந்த மாதமே கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கடந்த மாதம் 21ஆம் தேதியை மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. இருப்பினும் இதுவரை பல்வேறு இடங்களில் புனரமைப்பு பணிகள் நடைபெறவில்லை எனவும், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தமாக சரிசெய்யவும் விரைவில் நிதி வழங்கிடக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். மேலும் கொரோனா பெருந்தொற்றால் மாநில அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக, 1510.83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டடங்களை நிரந்தரமாக சரிசெய்ய 4719.62 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கக்கோரி கடந்த நவம்பர் 16 மற்றும் 25ஆம் தேதிகளன்றும், டிசம்பர் 15ஆம் தேதியன்றும் சேத விவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கைகள் சமர்பிக்கப் பட்டுள்ளதாகவும் முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.