புகழ்பெற்ற ஸ்பைடர்மேன் பட வரிசையில் எட்டாவதாக வெளியாகியிருக்கிறது ’Spider-Man: No Way Home’ திரைப்படம். கடந்த பாகங்களில் கிட்டத்தட்ட ஒரே கதை, வெவ்வேறு நடிகர் என இருந்ததை மாற்றி இந்த முறை ரசிக்கும்படியான கதைக்களத்தை அமைத்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் க்ரிஷ் மெக்கென்னா மற்றும் எரிக் சோம்மர்ஸ்.
2019-ல் வெளிவந்த ’Spider-Man: Far From Home’ படம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது ’Spider-Man: No Way Home’. பீட்டர் பார்க்கரே ஸ்பைடர் மேன் என எல்லோருக்கும் தெரிந்து விடுவதால், அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால், Doctor Strange இடம், தான் ஸ்பைடர்மேன் என்பதை ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மறந்துவிடும்படி செய்ய உதவி கேட்கிறான் பீட்டர் பார்க்கர்.
அப்போது நிகழும் பிரச்னையால் வெவ்வேறு பிரபஞ்சங்களில் இருந்த எலெக்ட்ரோ, Green Goblin, போன்றவர்கள் இங்கு வந்து பிரச்னை செய்யத் தொடங்குகிறார்கள். அவர்களை, Doctor Strange உதவியுடன் ஸ்பைடர்மேனால் அவரவர் பிரபஞ்சத்துக்குள் அனுப்ப முடிகிறதா என்பதே கதை.

வழக்கமான கதை சொல்லல் பாணியில் இருந்து விலகி, எடுத்த எடுப்பிலேயெ அதிரடி காட்டுவதிலேயே இது வேற மாதிரியான Spider-Man படம் என ஆச்சர்யப்படுத்துக்கிறார் இயக்குநர் ஜோன் வாட்ஸ். அதோடு, நகைச்சுவை, செண்டிமென்ட், ஆக்ஷன் என விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை படத்திற்கு பெரும் பலமாய் அமைந்திருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஒரு சர்ப்ரைஸ் 20 ஆண்டுகள் ஸ்பைடர்மேன் ரசிகர்களாய் தொடர்பவர்களிடத்தில் பெரும் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
சில இடங்களில் ஏன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் எனும் கேள்வியைத் தவிர்த்து, மற்றபடி சூப்பர் ஹீரோ பட ரசிகர்களுக்கான சூப்பர் திரைப்படம் Spider-Man: No Way Home.
ச.பொன்மனச் செல்வன்
இதையும் படிக்க: ’பீஸ்ட்’ அப்டேட்: புத்தாண்டில் வெளியாகும் முதல் பாடல்