கொரோனாவின் ஒமைக்ரான் வகை திரிபு பல நாடுகளில் வேகமாக பரவுகிறது. குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் இதன் தாக்கம் தற்சமயத்தில் அதிகம் உள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் திரிபானது வேகமாக பரவினாலும்கூட, அது குறைவான அளவே பாதிப்பை ஏற்படுத்துவதாக அறிவியலாளர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆறுதல் அளிக்கும் இந்த தகவல் வெளிவந்த இதேநேரத்தில், தற்போதைக்கு பிரிட்டனில் மட்டும் குறைந்தபட்சம் ஒரு உயிரிழப்பாவது ஏற்பட்டிருக்கும் என அதிகாரபூர்வகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் போன்ற புதிய புதிய திரிபுகளிலிருந்து மக்களை காக்க, பிரிட்டன் உட்பட சில நாடுகளின் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரிட்டன் உட்பட பல உலக நாடுகள், பூஸ்டர் டோஸை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியா குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அமலாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒமைக்ரான் உட்பட இதுவரை பரவிய எல்லாவகை கொரோனா திரிபுகளுமே, தடுப்பூசிக்கு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுவதை நிரூபிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணத்தினாலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முனைந்து வருகிறது. மட்டுமன்றி தடுப்பூசி மட்டுமே இப்போதைக்கு கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக உள்ளது.

image

தற்போதைக்கு இந்தியா மக்கள் தொகையில் தடுப்பூசி பெற தகுதியுடையவர்களானவர்களில் (18 வயதுக்கு மேற்பட்டோர்) சுமார் 50% பேர் இரு டோஸ் தடுப்பூசியும்; கிட்டத்தட்ட 90% முதல் டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர் என சமீபத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ராகேஷ் குமார் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

“ஹர் கர் தஸ்தக்” என்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் இந்தியா முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின்கீழ் மத்திய அரசு தரப்பிலிருந்து ‘இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பயன்பாடு’ குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதற்கு முன்னதாக குழந்தைகளுக்கான தடுப்பூசியை அமலுக்கு கொண்டுவரவே அரசு வேகமாக முனைந்து வருகிறது. தற்போது வரை, மத்திய மருத்து கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் கீழ், 5 கொரோனா தடுப்பூசிகள் குழந்தைகள் மத்தியிலான ஆய்வுநிலையில் உள்ளன. 

இதையொட்டியே, இந்த வார அத்தியாயம் அமையவுள்ளது.

image

முதலில், குழந்தைகளுக்காக இந்தியாவில் தயாராகிவரும் அந்த ஐந்து தடுப்பூசிகளின் பட்டியல் –

  • கேடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் சைகோவ் டி: தற்போதைக்கு இந்த தடுப்பூசி 12 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ளது. இருப்பினும் அவசர கால ஒப்புதலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போதைக்கு இது மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய 7 மாநிலங்களில் வழக்கத்துக்கு வந்துள்ளது.
  • கோவாக்சின்: பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ தடுப்பூசியை, 12 வயதுக்குக் கீழ் உள்ள (2-18 வயது)குழந்தைகளுக்கு செலுத்த ஆய்வு நடந்துவருகிறது. இரண்டாம் / மூன்றாம் கட்ட ஆய்வு நிலையில் இந்த ஆய்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு இதை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம் என இந்தியா பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் அதற்கு இன்னும் இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்கவில்லை.
  • சீரம் நிறுவனத்தின் கோவாவாக்ஸ், 2 – 17 வயதுடைய குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை செய்து வருகிறது. இதற்கும், இரண்டாம் / மூன்றாம் கட்ட ஆய்வு நிலையில் ஆய்வுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

image

  • பயோலாஜாக்கில்-இ நிறுவனத்தின் ஆர்.பி.டி தடுப்பூசி: 5 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதன் ஆய்வும் இரண்டாம் / மூன்றாம் கட்ட ஆய்வு நிலையில்  இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 624 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ஏடி.2எஸ் தடுப்பூசி: இது, 12 – 17 வயதுக்குட்பட்ட டீனேஜர்கள் மத்தியில் தனது ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதற்கும், இரண்டாம் / மூன்றாம் கட்ட ஆய்வு நிலையில் ஆய்வுகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. 920 பேர் மத்தியில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப்படியாக ஐந்து தடுப்பூசிகளிலும், ஒவ்வொன்றும் 2 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்குமே தடுப்பூசி கிடைக்கும் வகையில் வெவ்வேறு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத்தகவல்களை, நடைபெற்று முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கூறியிருந்தார்.

உலகளவில் அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தோனேஷியா, ஸ்பெயின், சுவீடன், ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, அர்ஜென்டினா, கியூபா, கொலம்பியா, ரஷ்யா, நார்வே, பஹ்ரைன், இஸ்ரேல், சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு நாடுகளும், வெவ்வேறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி தருகிறது. உதாரணத்துக்கு, இந்தோனேஷியா 6- 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு; கனடா 12 – 17 வயதுக்குட்பட்டோருக்கு; அமெரிக்கா 5 – 18 வயதுக்குட்பட்டோருக்கு என தடுப்பூசி வழங்கி வருகிறது. அந்தந்த நாடுகள் செய்த ஆய்வின்படி வயது நிர்ணயிக்கப்படுகிறது.

image

வயது மட்டுமன்றி குழந்தைகளின் உடல்நலனும் கவனத்தில் கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு டென்மார்க்கில் தொற்றுக்கான சாத்தியமுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. இதுவே இத்தாலியில் “தடுப்பூசியென்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு அது இன்னும் எளிமையாக்கப்பட்டுள்ளது” எனக்கூறப்பட்டு Vax Day (தடுப்பூசி தினம்) என்ற பெயரில் தனியொரு தினமே (டிச.15) கொண்டாடப்பட உள்ளது.

இப்படியாக குழந்தைகள் மத்தியில் உலக நாடுகள் தடுப்பூசி விநியோகத்தை அதிகரித்து வரும் காரணத்தால் கனடாவில், குழந்தைகளில் கிட்டத்தட்ட 7.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. போலவே ஸ்பெயினில் 12 வயதுக்கு மேற்பட்ட 90% பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இன்னும் இந்த எண்ணிக்கையை உயர்த்தவும் வாய்ப்புள்ளதாக ஸ்பெயின் கூறுகிறது.

image

இப்படி பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் சிறார்களுக்கான தடுப்பூசி விநியோகத்தை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என்றும், அதற்கான பணிகளை துரிதப்படுத்தப்பட வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில், இந்தியாவிலும் பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் கொரோனாவுக்கு எதிராக மாற்றப்படுவர் என நம்பலாம்!

முந்தைய அத்தியாயம்: கொரோனா கால மாணவர் நலன் 13: குழந்தை திருமணம் – டீன் ஏஜ் இன்னல்களும், உயிர் ஆபத்துகளும்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.