ஒட்டுமொத்த இந்தியாவுமே முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் இறப்பு பற்றிய பரபரப்பில் ஆழ்ந்திருக்க, அந்தநேரத்தில் மிக முக்கியமான ஒரு முடிவை போகிற போக்கில் அறிவித்திருக்கிறது பிசிசிஐ.

ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகிவிட்டதால், இனி லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு முழுவதுமாக ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக மட்டும் கோலி நீடிக்க இருக்கிறார்.

விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தாலும் இது சில காலமாகவே எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புதான். அதை பிசிசிஐ அறிவித்தவிதம்தான் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்த போது, பிசிசிஐ செயலாளர் கங்குலி, கௌரவ செயலாளர் ஜெய் ஷா என பலரும் வீடியோ பதிவில் கோலிக்கு நன்றி கூறியிருந்தனர். ஆனால், இங்கே ஓடிஐ போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலியை நீக்குவதாகவோ அல்லது அவருக்கு நன்றி தெரிவித்தோ பிசிசிஐயின் ட்வீட்டில் ஒரு வரி கூட இல்லை. வெறுமென ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டு 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோலியிடமிருந்து இன்னமும் எந்த ரியாக்சனும் இல்லை.இருதரப்புமே அதிருப்தியில் இருக்கிறதா? பிசிசிஐ கோலியை ஓரங்கட்ட நினைக்கிறார்களா? இது போன்ற கேள்விகளை இந்த அணுகுமுறைகள் உண்டாக்கியிருக்கின்றன.

கங்குலி

ஓடிஐ போட்டிகளில் கேப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் 70.43%. இது இந்திய அணியின் வேறெந்த கேப்டன்களின் ஓடிஐ ரெக்கார்டுகளை விடவும் அதிகம்.

19 இருதரப்பு ஓடிஐ தொடர்களில் கோலி இந்திய அணியை வழிநடத்தியிருக்கிறார். இதில் 15 தொடர்களில் இந்தியா வென்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் கேப்டனாக ஓடிஐ தொடரை வென்று கொடுத்திருக்கிறார். 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டி வரையும் 2019 உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டி வரையும் இந்திய அணியை அழைத்து சென்றிருக்கிறார். திடீரென கேப்டன் பதவியை பறிக்கும் அளவுக்கு கோலி ஒரு மோசமான கேப்டன் இல்லை என்பதை இந்த ரெக்கார்டுகளே சொல்கின்றன.

2023 இல் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை வரை கேப்டனாக செயல்பட வேண்டும் என்பதே கோலியின் விருப்பம். டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது கோலி வெளியிட்ட அறிக்கையிலும் அந்த விருப்பத்தைதான் வெளிப்படுத்தியிருந்தார். ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் தொடர்ச்சியாக கேப்டனாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ரெக்கார்டுகளும் அவருக்கு சாதகமாகவே இருக்கிறது. அப்படியிருந்தும் புதிய கேப்டனை நியமிப்பதில் பிசிசிஐ ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது? வேறென்ன ஐ.சி.சி கோப்பைகள்தான்.

ஆரம்பத்திலிருந்தே கோலியெல்லாம் கேப்டன் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார் என்கிற பிம்பம் அவர் மீது இருக்கவே செய்தது. காரணம், ஐ.பி.எல். ஐ.பி.எல் சீசன்களில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக இருந்து அந்த அணியை சுமாராக வழிநடத்தியதால் அந்த விமர்சனங்கள் அவரின் இந்திய கேப்டன்சி மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் கடந்துதான் 2017 ஆம் ஆண்டில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டன் ஆனார். இதுவரை இந்திய அணி பார்க்காத பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். பிசிசிஐயும் கோலிக்கு முழு ஆதரவை கொடுத்து வந்தது.

அனில் கும்ப்ளே – விராட் கோலி

கோலிக்கும் அனில் கும்ப்ளேவுக்கும் உரசல் ஏற்பட்ட போது பிசிசிஐ யார் பக்கம் நின்றது என்பதிலிருந்து இதை உணர முடியும். இந்திய அணியின் கேப்டனாக முழு அதிகாரத்தோடு கோலி வீறுநடை போட்டார்.

ஆனால், வருடங்கள் நகர நகர பிசிசிஐ எதிர்பார்த்த ரிசல்ட்டை கோலியால் வழங்க முடியவில்லை. 2013க்கு பிறகு ஐ.சி.சி தொடரை வெல்லவில்லை என்கிற சோக வரலாறு கோலியின் கேப்டன்சியிலும் தொடர்ந்தது. 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி, 2019 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி தோல்வி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி, சமீபத்தில் டி20 போட்டிகளில் நாக் அவுட் சுற்றுக்கு கூட செல்லாமல் மோசமான தோல்வி என கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி தொடர்ச்சியாக 4 ஐ.சி.சி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் சொதப்பியிருக்கிறது. கோலியின் ஐ.பி.எல் ரெக்கார்டுகளும் இவற்றின் கூடவே சேர்த்து மதிப்பிடப்பட்டது என்பதையும் மறுக்க முடியாது. இவையெல்லாம் சேர்ந்துதான் பிசிசிஐக்கு கோலியின் கேப்டன்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதிகமான வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கும் கேப்டன் என்றாலும் பிசிசிஐ எதிர்பார்த்த ஐ.சி.சி டிராபிகளில் கோலி கோட்டைவிட்டிருந்தார். இந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் போட்டிகளில் அடுத்தடுத்து கோப்பைகளை வென்று கேப்டன் பதவிக்கான ரேஸில் ரோஹித் சர்மா இணைந்தார். ஐ.பி.எல் இல் ஒவ்வொரு முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வெல்லும்போதும் ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக்க பிசிசிஐக்கு ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் ஆகியோரின் தரப்பிலிருந்து அழுத்தம் உண்டாகிக் கொண்டே இருந்தது.

இந்த சமயத்தில் கோலியின் பேட்டிங் ஃபார்மும் விழத் தொடங்கியது மேலும் பின்னடைவானது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு கேப்டன்சி விஷயத்தில் கடுமையான முடிவுகளை எடுக்க பிசிசிஐ தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. சில மாதங்களுக்கு முன்பு, 2023 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் சர்மாவை லிமிட்டெட் போட்டிகளுக்கு கேப்டன் ஆக்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதாக ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பிசிசிஐ தரப்பில் உடனே இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த செய்தி வெளியான ஒரே வாரத்திற்குள் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். பிசிசிஐயும் அவருக்கு நன்றி தெரிவித்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

பிசிசிஐ கோலியை முழுவதுமாக ஒயிட்பால் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியிலிருந்து விலக்க விரும்பியதாகவும், ஆனால் கோலி டி20 போட்டிகளில் மட்டும் கேப்டன் பதவியிலிருந்து விலகி பிசிசிஐக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அனில் கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் முரண் ஏற்பட்ட போது கோலிக்கு பிசிசிஐயுடன் இருந்த உறவிற்கும் இப்போது இருக்கும் உறவிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருப்பதாகவே தெரிகிறது. இப்போது கோலிக்கும் பிசிசிஐக்குமே பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. கோலியால் முன்பு போல் முழு அதிகாரத்தையும் பிசிசிஐயிடம் வெளிக்காட்ட முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. பயிற்சியாளர் பதவிக்காலம் முடிந்தவுடன் ரவிசாஸ்திரி அளித்த பேட்டிகளில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்லியிருப்பார். அதாவது,

விராட் கோலி
ரவி சாஸ்திரி – கோலி – தோனி – ரோஹித்

என கூறியிருப்பார். கேப்டனின் கருத்தே இல்லாமல் ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தையும், அந்த அணிக்கு தோனி மாதிரியான ஒரு பெரிய வீரரை முன்னுதாரணமற்ற முறையில் ஒரு தொடருக்கு மட்டும் ஆலோசகராக கொண்டு வந்த முறையையும் பார்க்கும் போதே கோலியின் அதிகாரம் எந்தளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

ஆண்டுக்கு ஒரு உலகக்கோப்பை/சாம்பியன்ஸ் டிராபி தொடர் என ஐ.சி.சி அடுத்த 10 ஆண்டுகளுக்கு திட்டமிட்டு வைத்திருக்கும் நிலையில், தொடர்ச்சியாக 4 ஐ.சி.சி தொடர்கள் அதிலும் குறிப்பாக 3 லிமிட்டெட் ஓவர் ஐ.சி.சி தொடர்களில் தொடர்ந்து தோற்றிருக்கும் கோலியை கேப்டனாக வைத்து ரிஸ்க் எடுப்பதில் பிசிசிஐக்கு இனியும் விருப்பமிருப்பதாக தெரியவில்லை. கோலிக்கு அடுத்த இடத்தில் அந்த கேப்டன் பதவிக்கான தகுதியோடு வேறெந்த வீரரும் இல்லாமல் போயிருந்தால் இந்த மாதிரியான தர்மசங்கடம் கோலிக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால், ஒரே உறையில் இரண்டு கத்தி என்பதை போல கோலிக்கு பின்னால் ரோஹித் வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தார். வெளி விமர்சனங்களும், ஐ.பி.எல் ரெக்கார்டுகளும் அவருக்கு சாதகமாக அமைந்தன. இதனாலயே கோலி ஓரங்கட்டப்பட்டு ரோஹித் கேப்டனாக்கப்பட்டிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் கோலியின் கேப்டன்சியையும் அவர் உருவாக்கி வைத்திருக்கும் அணியையும் விமர்சிக்கவே முடியாது. மேலும், அங்கு கோலிக்கு ரோஹித் ஒரு போட்டியே கிடையாது. அதனால் எந்த பிரச்சனையும் இன்றி கோலி விரும்பும்பட்சத்தில் கோலியே தொடர்ந்து கேப்டனாக நீடிப்பார்.

கோலி

கோலி டி20 போட்டிகளில் கேப்டன் பதவியை விட்டு விலகிய போது, பிசிசிஐ வெளியிட்ட வீடியோக்களில் இனி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணி வடிவமைக்கப்படும் என கங்குலி பேசியிருப்பார். ஆனால், இப்போது ரோஹித்தை கேப்டனாக்கியிருக்கும் இந்த முடிவு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுத்த முடிவாக இல்லை. ஏனெனில், ரோஹித் சர்மாவுக்கு இப்போது 34 வயதாகிறது. எதிர்கால அடிப்படையில் என்றால் இளம் வீரர் ஒருவருக்கே கேப்டன்சி சென்றிருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. ரோஹித்தை கேப்டன் ஆக்குவதன் மூலம் அடுத்தடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பைகளை பிசிசிஐ குறி வைத்திருக்கிறது. குறிப்பாக, 2023 இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே பிசிசிஐயின் நோக்கம்.

பிசிசிஐ கேப்டன் பதவியை விட்டு நீக்கிவிட்டது என்பதற்காகவே கோலி ஒரு மோசமான கேப்டன் என வரலாற்றில் பதிவாகிவிடாது. மூன்று ஃபார்மட்களிலும் இந்திய அணி இதற்கு முன் பெறாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவரும் பேசப்படுவார்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.