‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், அஷ்வின். அவர் நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ பட விழாவில் அஷ்வின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே 2020-ல் வெளியான ‘இந்த நிலை மாறும்’ என்கிற படத்தில் அஷ்வின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அந்தப் படத்தின் இயக்குனர் அருண் காந்த்திடம் பேசினோம்.
‘என்னோட சொந்த ஊர் கோயம்புத்தூர். நாங்க நண்பர்கள் சேர்ந்து சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தோம். அப்படி நாங்க எடுத்த படத்தில் அஷ்வின் பிரபலமாவதற்கு முன்னரே அவரை கதாநாயகனாக நடிக்க வச்சோம். சின்ன பட்ஜெட் படம் என்பதால் ரொம்ப பெரிய அளவில் படத்தை ப்ரமோட் பண்ண முடியலை. அஷ்வின் அப்போ மார்கெட்டில் இல்லை. அவருக்காக அவ்வளவு செலவு பண்ணி ப்ரமோட் பண்ண முடியாது. அந்த அளவுக்கு எங்ககிட்ட பட்ஜெட் இல்லை. அந்த ஒரு காரணத்துக்காக அவர் எப்படி அந்தப் படத்தில் நடிக்கலைன்னு சொல்ல முடியும்?
பெரிய பேனர் படங்களில் நாம நடிக்கணும் என்கிற பிராண்ட் மனநிலையும் ஒரு காரணம். அப்படியான எண்ணம் இருக்கிறவங்க ஏன் படத்தில் நடிக்க சம்மதிக்கணும். அவர் பிரபலமாகிறதுக்கு முன்னாடியே அவரை சப்போர்ட் பண்ணி அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். ஷார்ட் பிலிம், இன்டிபென்டன்ட் பிலிம் மூலமா எப்படி படம் எடுக்கக் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்னு சொல்றது எவ்வளவு தவறான விஷயம்?
இதுவரை அவர் பற்றி நான் எங்கேயும் தவறா ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை. நீங்க கேட்டதால மட்டும்தான் இப்பக்கூட சொல்றேன். அவரை வச்சு நான் டைரக்ட் பண்ணின முதல் படம் அது. அடுத்தடுத்து இப்போ மூணு படங்கள் பண்ணிட்டேன். நாலாவது பட ஷூட்டிங் அடுத்த வாரம் ஆரம்பிக்கப் போறேன். அவர் நடிச்ச படம் சத்யம் தியேட்டரிலேயே பதினோரு நாள் ஓடுச்சு. அந்தப் படத்தை பார்த்தவங்களுக்கு, இவர் ஏற்கெனவே ஹீரோவா ஒரு படம் நடிச்சிருக்காரே பின்ன ஏன் இது முதல் படம்னு சொல்றார்னு எண்ணம் வந்து பலரும் என்னை டேக் பண்ணி ட்விட்டரில் கேட்டுட்டு இருக்காங்க.
உண்மையில், அந்த கேள்வியை அஷ்வின்கிட்ட தான் கேட்கணும். அவர் ஏன் சொல்லலைன்னு எனக்கு எப்படி தெரியும்? ஆனா, படம் இந்தியாவிற்கு வெளியே அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கு. சீக்கிரமே படத்தை நாங்க ரீ-ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கோம். அதுமட்டுமில்லாமல், இந்தியாவிற்குள்ளேயும் ஓடிடியில் படத்தை வெளியிட முடிவு பண்ணியிருக்கோம். அப்படி படம் வெளியாகும் பட்சத்தில் அவர் இது உங்க முதல் படம் தானேன்னு கேட்குறவங்களுக்கு என்ன பதில் சொல்லுவார்? அதே மாதிரி, எனக்கு படம் பிடிக்கலைன்னா படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டேன்னு அவர் எப்படி சொல்ல முடியும். படத்தை ரிலீஸ் பண்ணனுமா, வேண்டாமான்னு தயாரிப்பாளரும், டைரக்டரும்தான் முடிவு பண்ணனும்.
எப்படி நடிப்பில் நம்மை வளர்த்துக்கணும்னு யோசிச்சு அதை கத்துக்கிட்டார்னா அவரோட கேரியருக்கு அது உதவியா இருக்கும். டீம் ஸ்பிரிட் இருக்கணும். அது அவர்கிட்ட இல்லை. திடீர்னு அவருக்கு புகழ் கிடைச்சிருக்கு… ஆனா, அவர் ஃபேமஸ் ஆகிறதுக்கு முன்னாடியே நட்பின் காரணமா பலரும் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. ஆனா, அவங்களுக்கான சின்ன அங்கீகாரத்தை கூட அவர் கொடுக்க மறந்துட்டார்!’ என்றார்.