நாகாலாந்து மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொது மக்களில் 13 பேரும், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் என மொத்தமாக 14 பேர் உயிரிழந்தனர். பொதுமக்கள் மீதே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
“ராணுவத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 21 பேர் அடங்கிய கமாண்டோ குழுவினர் சந்தேகத்திற்குரிய இடத்தில் பதுங்கி இருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாகனம் வந்துள்ளது. அதை நிறுத்துமாறு கமாண்டோ குழுவினர் சிக்னல் கொடுத்துள்ளனர். இருந்தாலும் அந்த வாகனம் அங்கிருந்து வேகமாக தப்ப முயன்றது. அதனால் அவர்கள் கிளர்ச்சியாளர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதனால் வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் உயிரிழந்தனர். பின்னர்தான் இந்த தாக்குதல் தவறுதலாக நடந்து விட்டது தெரியவந்தது. இதில் காயம்பட்ட இருவர் அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை அறிந்து கொண்ட உள்ளூர் கிராம மக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த ராணுவ வாகனங்கள் இரண்டிற்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து கிராம மக்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் நோக்கிலும், கூட்டத்தை கலைக்கும் நோக்கிலும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரரும் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சட்டத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார் அமித்ஷா.