AK-203 துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் மேலும் 10 வருடங்களுக்கு இந்தியா ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ரஷ்யாவின் பிரபல AK-203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதல் உறுதியாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் சுமார் 7 லட்சம் AK-203 ரக துப்பாக்கிகளை இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான செலவீனம் கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இந்த ஏகே-203 அசால்ட் ரைபிள் வகை துப்பாக்கிகள் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும், பின்னர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியில் உற்பத்தி செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை: ஏ.கே.203 துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்
இதற்கான ஒப்பந்தம் இன்று ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு மற்றும் இந்திய பாதுகாப்பு தறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த கையெழுத்தில், இந்திய ராணுவ கொள்முதல் தவிர பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அமேதி பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத்தறை ஒத்துழைப்பை தொடரவும் இந்தியா மற்றும் ரஷ்யா முடிவு செய்துள்ளன. இதுகுறித்தும் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு மற்றும் இந்திய பாதுகாப்பு தறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்தினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே ரஷ்ய நாட்டில் இருந்து வான்வழி பாதுகாப்புக்காக S-400 ஏவுகணை கருவிகள் தொகுப்பு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த S-400, தொகுப்பாக நிறுவப்படும் ஏவுகணைகள் மூலம், எதிரி நாடுகள் விமானத் தாக்குதல் அல்லது ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் அதை விரைவாக கண்டறிந்து முறியடிக்கும் பதில் தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது.
ரஷ்ய நாட்டில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யவது தொடர்பான ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத்தவிர தொழில்நுட்பம், வணிகம் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் தயாராகி வருகின்றன. மேலும் பல ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் விரைவில் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– கணபதி சுப்ரமணியம்