மோசடி புகாரில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி. இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 17 லட்சம் பணம் பெற்றதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனிடையே மோசடி புகாரில் சிக்கிய மணி தலைமறைவாகி முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி ஆன நிலையில் தனிப்படை போலீசார் மணியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மணியை அவரது சொந்த ஊரான ஓமலூரை அடுத்த நொடியில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.