மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முறை முயன்று தோல்வியைத் தழுவியது. இதனால் தற்போது பா.ஜ.க அமைதி காத்துவருகிறது. ஆனால் சிவசேனா கூட்டணி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க தக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “வரும் மார்ச் மாதம் புதிய அரசு அமையும்’’ என்று மத்திய அமைச்சர் நாராயண் ராணே ஊடகச் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சிவசேனாவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குச் சென்று அங்கிருந்து தனிக்கட்சி ஆரம்பித்து, தற்போது பா.ஜ.க-வில் ஐக்கியமாகிருக்கும் நாராயண் ராணே ராஜஸ்தானில் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “விரைவில், அதாவது மார்ச் மாதம் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் அல்லது இந்த அரசு கவிழும். எதுவாக இருந்தாலும் அதை ரகசியமாக வைத்திருப்போம். உத்தவ் தாக்கரே இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். எனவே, அவரைப் பற்றிப் பேசக் கூடாது என்று எங்கள் கட்சித் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்திருக்கிறார். ஆனால் மூன்று கட்சிகளைக்கொண்ட கூட்டணி அரசு நீண்ட நாள்களுக்கு நீடிக்காது. பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை அமைக்க முயற்சிகள் நடக்கின்றன” என்று தெரிவித்தார்.
நாராயண் ராணே கடந்த சில மாதங்களுக்கு முன்பு `உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்’ என்று தெரிவித்திருந்தார். உடனே போலீஸில் சிவசேனா தொண்டர்கள் இது தொடர்பாகப் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து நாராயண் ராணேவைக் கைதுசெய்தனர். ஆனால் இரவோடு இரவாக ஜாமீனில் வெளியில் வந்தார். நாராயண் ராணே சிவசேனாவில் இருந்தபோதே, உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கட்சியிலிருந்து வெளியேறினார்.
Also Read: `கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50,000 கொடுக்க முடியாது!’ – கைவிரித்த மகாராஷ்டிரா