’மாநாடு’ படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவையும், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவையும் பாராட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
’ஈஸ்வரன்’ படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது. எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா, சிம்புவை பாராட்டுவதுபோலவே முகம் தெரியாத மற்றொரு ஹீரோவாய் நம் மனதையும் காதுகளையும் ஆக்கிரமிக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையையும் பாராட்டி வருகிறார்கள். யுவனின் பின்னணி இசை பின்’ஏணி’ இசையாய் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’மாநாடு’ பார்த்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்டோரை போனில் தொடர்பு கொண்டு படத்தை பாராட்டி வாழ்த்தியுள்ளார். அதேபோல, நடிகர் சிவகார்த்திகேயனும் ‘மாநாடு’ படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தில், “மாநாடு படத்தை பார்த்து ரசித்தேன். ஒட்டுமொத்தப் படக்குழுவும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சிம்பு சார் சூப்பர். எஸ்.ஜே சூர்யா சார் நீங்க தெறிச்சிட்டீங்க. யுவன் ஷங்கர் ராஜா பிஜிஎம் ஃபயரா இருந்துச்சி. மொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று உற்சாகமுடன் பாராட்டியிருக்கிறார்.