மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால், தரைப்பாலம் மூடப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணை முழு கொள்ளவை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 5,910 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகையாறு செல்லக்கூடிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து 10,000 கன அடி அளவிற்கு வரத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளமையால், யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து தரைப்பாலத்தில் பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டதோடு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்க வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக வைகை ஆற்றில் குளிக்க சென்ற மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கரையோரங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: கடலூர்: தொழுதூர் அணையிலிருந்து 8,062 கன அடி நீர்திறப்பு; மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை