மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சங்கமா உள்பட12 எம்எல்ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை கடந்து வடகிழக்கு மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக திரிபுராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்நிலையில், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரஸை பலப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கட்சியின் உயர் பொறுப்புக்கு தன்னை நிராகரித்துவிட்டதால் மன வருத்தத்தில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேகலாயா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான சங்கமா, தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகியுள்ளனர். மொத்தமுள்ள 17 எம்எல்ஏக்களில், மூன்றில் இரு பங்கு பேர் வேறு கட்சிக்கு தாவினால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.
எனவே, திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமான 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என கூறப்படுகிறது. இதனால், திரிணாமுல் காங்கிரஸ் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுப்பதிருப்பதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.