அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப் போட்டியில் கர்நாடகவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது தமிழ்நாடு கிரிக்கெட் அணி. அதிரடியாக விளையாடிய தமிழ்நாடு அணி வீரர் ஷாருக்கான், 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். இறுதி பந்து வரை ஆட்டத்தை எடுத்து சென்று வெற்றியுடன் முடித்துக் கொடுத்தார் அவர்.
தோனியை போலவே கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மாஸ் காட்டியிருந்தார் ஷாருக்கான்.
இந்த நிலையில், அன்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பதட்டமின்றி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுக்க முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு கொடுத்த ஆலோசனைகள் தான் காரணம் என தெரிவித்துள்ளார் ஷாருக்.
“ஒரு ஃபினிஷரின் ரோல் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கி இருந்தார் தோனி. களத்தில் நாம் செய்வதுதான் சரி என என்னை நம்புமாறு சொல்லி இருந்தார். ஏனென்றால் அந்த சூழலில் ஆட்டத்தின் போக்கை சரியாக கணித்திருப்பவர் நீங்கள் தான். மேலும் இலக்கை விரட்டும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் எனவும் தோனி சொன்னார்” என தெரிவித்துள்ளார் ஷாருக்கான்.
2021 ஐபிஎல் சீசனில் ஷாருக்கான், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். விரைவில் நடைபெற உள்ள மெகா ஐபிஎல் ஏலத்தில் அவருக்கு அதிக டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் ஷாருக்கான் விளையாடியதை டிவி மூலம் பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.