நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் என இந்திய அணி கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை காலை தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரஹானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஷர்மா, பும்ரா, ரிஷாப் பண்ட், முகமது ஷமி ஆகியோருக்கும் பணிச்சுமை கருதி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதனால் வழக்கமான டெஸ்ட் அணியில் இடம்பெறும் 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை ஆடும் லெவனில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று கேப்டன் ரஹானே உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார்.