பொதுப்பணித்துறையின் வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகம், வேலூர் தந்தை பெரியார் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவருகிறது. வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் அரசுக் கல்லூரிக் கட்டுமானப் பணிகள், இந்த அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் 2019-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவந்தார். இந்த நிலையில், தீபாவளியையொட்டி கட்டட ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரி ஷோபனா வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸாருக்குப் புகார்கள் குவிந்தன.

கைப்பற்றப்பட்ட பணம்

அதையடுத்து, ரகசியமாக அவரைக் கண்காணிக்கத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நவம்பர் 2-ம் தேதி இரவு, தொரப்பாடி-அரியூர் சாலையிலிருக்கும் ஓர் உணவகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஷோபானாவின் காரை அதிரடியாகச் சோதனை செய்தனர். ஒரு துணிப்பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் கட்டுகளைக் கைப்பற்றி எண்ணிப் பார்த்தபோது, 5 லட்சம் ரூபாய் இருந்தது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஷோபனாவிடம் இல்லாததால், அதைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியிருந்த குடியிருப்பிலும் சோதனை நடத்தினர்.

Also Read: வேலூர்: “ரூ.5,000 கமிஷன் கொடுத்தால்தான் பில் பாஸ் ஆகும்” – கறார்காட்டிய ஆவின் அதிகாரி கைது!

அங்கும் உரிய ஆவணங்களின்றி இருந்த 15.85 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ரூ.3.92 லட்சத்துக்கான மூன்று காசோலைகள், 18 சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக, மாவட்ட ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில், பொதுப்பணித்துறை அதிகாரி ஷோபனா மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, ஷோபானாவின் சொந்த ஊரான ஓசூர் நேரு நகரிலிருக்கும் அவர் வீட்டிலும் சோதனை நடத்தியதில், 2 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது.

ஷோபனா

அதுமட்டுமின்றி, 38 பவுன் தங்க நகைகள், 1 கிலோவுக்கும் மேலான வெள்ளி நகைகள், 28 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்புச் சான்றிதழ், 11 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அந்த நகை, பணத்தை வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ஒப்படைத்திருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தனர். ஷோபனா பொறுப்புக்கு வந்த பின்னர் நடந்த பணிகளின் விவரங்களுடன், அந்தப் பணிகளை எடுத்துச் செய்த ஒப்பந்ததாரர்கள் பட்டியலையும் வைத்து விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அதற்காக ஒப்பந்ததாரர்கள் பட்டியல், முடிந்திருக்கும் பணிகள், நடந்துவரும் பணிகள் தொடர்பான விவரங்களையும் திரட்டி நடவடிக்கையிலும் இறங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், வேலூர் தொழில்நுட்பக் கல்விக் கோட்டச் செயற்பொறியாளர் பதவியிலிருந்த ஷோபனா பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டட கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துணைக் கண்காணிப்புப் பொறியாளராக அவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்திருக்கிறார்.

வேலூரிலிருந்த பதவியும், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பதவியும் கிட்டத்தட்ட ஒரே ரேங்க்கில்தான் வருகின்றன. இருந்தாலும், வேலூரில் நேரடியாக அதிகாரம் செலுத்தியதைப் போன்று திருச்சியில் அவரால் செயல்பட முடியாது, என்கிறார்கள் துறை அதிகாரிகள். உயரதிகாரியின் கண்காணிப்பில் அவர் விடப்பட்டிருக்கிறார். இந்தப் பணியிட மாற்றமும், லஞ்ச ஒழிப்புப் புகாரின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுப்பணித்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணைக்கு அழைத்தால், ஷோபனா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.