நேற்று நடைபெற்ற டி-20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றது. இந்தத் தொடர் முழுக்கவே பாகிஸ்தான் அணி மிகவும் பலம் பொருந்திய அணியாகவே விளங்கியது. அரையிறுதிக்கு முன் ஆடிய ஐந்து போட்டிகளையும் வென்றிருந்தது. நேற்று அரையிறுதி போட்டி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 176 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது. இதற்கு முக்கிய காரணம் அதன் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 67 ரன்கள் எடுத்ததுதான். ஆனால், பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டுமென மைதானத்தில் குவிந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதி ஓவர்களில் மாத்யூ வேடின் அதிரடியால் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தில் தோற்றபோதும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறார். காரணம் நேற்றைய ஆட்டத்திற்கு முதல்நாள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் ரிஸ்வான். செவ்வாய் கிழமை துபாயிலுள்ள ஒரு மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சுவாச குழாயில் ஏற்பட்ட தீவிர தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு இரவுகள் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஸ்வான் நேற்று காலைதான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சூழலிலும் நேற்றைய போட்டியில் களம்கண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரிஸ்வான். அவரது இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமிருக்கின்றன.
Also Read: IND vs PAK: பாகிஸ்தான் 29 ஆண்டுகள் காத்திருந்த வெற்றி… கோலியைச் சுற்றும் அணித்தேர்வு விமர்சனங்கள்!
“ரிஸ்வான் ஒரு போராளி. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினார். இன்று அவர் செய்தது அவரது துணிச்சலுக்கான எடுத்துகாட்டு” என்றார் பாகிஸ்தான் பயிற்சியாளர் மாத்யூ ஹெய்டன்.
“அணிக்காக எதுவும் செய்யக்கூடியவர் ரிஸ்வான்” என போட்டிக்கு அவரை பாராட்டினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!