சாதி பாகுபாடு காரணமாக ஒருவர் தினமும் 150 கி.மீ பயணம் செய்து பணிக்கு வரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர்.
குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள சத்திரியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் கன்ஹையலால் பரையா (வயது 50). பள்ளி ஆசிரியரான இவர், அதே மாவட்டத்தில் உள்ள நினமா கிராமத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டார். இது அவருடைய சொந்த ஊரில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவர் பணியில் சேர்ந்த அன்றே அந்தப் பகுதியில் வாடகைக்கு வீடு தேடத் தொடங்கினார். வீட்டு உரிமையாளர்கள் கன்ஹையலால் பரையாவின் சாதிப் பின்னணி குறித்து விசாரிக்கையில் அவர், வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த பட்டியலினத்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு யாரும் வாடகைக்கு வீடு தரவில்லை. இதனால், தினமும் 150 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு பணிக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து சமூக நீதி மற்றும் கல்வித்துறைக்கு அவர் புகார் அனுப்பினார். ஆனால், உரிய பதில் ஏதும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவரை இடமாற்றம் செய்யுமாறு சமூக நீதித்துறை கடந்த வாரம் கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது.
இதுபற்றி கன்ஹையலால் பரையா கூறும்போது, ’என் நிலைமை குறித்து முதலமைச்சர் புபேந்திர படேலுக்கும் தெரிவித்தேன். என்னை வேறு ஊருக்கு இடம்மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தேன். அந்த விவகாரத்தை நான் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னார்’ என்றார். இதுபற்றி சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, தற்போது விடுமுறையில் இருப்பதாகவும் இந்த விஷயம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பட்டியலின சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சாதியின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவது இங்கு சகஜம்தான் என்றும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளனர்.