சூடானில் பிரதமர் அப்துல்லா ஹம்தோக்கை கைது செய்த ராணுவம் இடைக்கால அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து ராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற வேண்டும் என ஒரு பிரிவினரும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்ய வேண்டுமென மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது. தேர்தல் நடைபெறும் வரை பிரதமர் அப்துல்லா ஹம்தோக் தலைமையில் இடைக்கால அரசு நடந்து வந்தது. இந்நிலையில், மக்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்க சில வாரங்களே இருந்த நிலையில் ராணுவம் திடீரென பிரதமர் மற்றும் அமைச்சர்களை கைது செய்துள்ளது. தலைநகர் முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ராணுவ தளபதி அப்தெல் பத்தா பர்ஹன் தொலைக்காட்சியில் தோன்றி இடைக்கால அரசை கலைப்பதாக அறிவித்தார்.
அரசியல்வாதிகளுக்கிடையில் மோதல் ஏற்படுவதால் ராணுவம் தலையிட வேண்டி இருப்பதாகவும் அவர் கூறினார். 2023ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெறும் வரை ராணுவம் ஆட்சியில் இருக்கும் என அவர் திட்டவட்டமாக கூறினார். இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: துருக்கி: நடுவானில் பாராகிளைடிங் வீரர்கள் திடீரென மோதல்