இங்கிலாந்து நாட்டில் 58 ஆண்டுகளுக்கு பிறகு தனது தந்தையை அடையாளம் கண்டு, அவருடன் இணைந்துள்ளார் பெண் ஒருவர். அவரது தந்தையை தேடிக் கொடுத்துள்ளது ஃபேஸ்புக். இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்பதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி உள்ளது.
அந்த நாட்டின் லிங்கன்ஷயர் பகுதியை சேர்ந்தவர் 59 வயதான ஜூலி லண்ட். அவருக்கு ஒரு வயது இருக்கும் போதே அவரது தந்தை பிரையன் Rothery மற்றும் தாயாரும் பரஸ்பரமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். அவரது தாய் வேறொருவரை மணம் செய்து கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் தனது தந்தை யார் என்பது தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளார் ஜூலி. ஒரு கட்டத்தில் அவருக்கு உண்மை தெரிய வந்துள்ளது. அதனால் தனக்கு உயிர் கொடுத்த அசல் தந்தையை தேடும் நோக்கில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுள்ளார். இருந்தும் அதை அவரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை செய்ய முடியவில்லை. அவரது அம்மாவும் இந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்தான், ஃபேஸ்புக் கம்யூனிட்டி குழுமம் ஒன்றில் தனது தந்தை குறித்தும், தனது தேடல் குறித்தும் பதிவு செய்துள்ளார் ஜூலி. அதோடு அந்த குழுவில் இருந்த உறுப்பினர்களின் உதவியையும் கோரியுள்ளார். அடுத்த சில நாட்களில் அந்த குழுவினரின் மூலம் தனது தந்தை உடன் இணைந்துள்ளார் ஜூலி. இருவரும் வெறும் ஒரு மணி நேர பயண தூரம் செய்தால் சென்றடைய கூடும் இடத்தில் தான் வாழ்ந்து வந்துள்ளனர். இருந்தாலும் அந்த விவரத்தை அறியாமல் பிரிந்து வாழ்ந்துள்ளனர். ஜூலி, லிங்கன்ஷயர் பகுதியிலும். அவரது தந்தை பிரையன், மேற்கு யார்க்ஷயரில் உள்ள டியூஸ்பரி எனும் இடத்தில் வசித்து வந்துள்ளனர்.
“இது ஒரு அதிசய அற்புதம். எனக்கு அதன் மீது அறவே நம்பிக்கை கிடையாது” என மகளுடன் இணைந்த பிரையன் தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட ஜூலி, “இப்போது நாம் ஒன்று அப்பா!” என தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தகவல் மற்றும் படம் : BBC