சென்னை சூளைமேடுப் பகுதியில் உள்ள பெரியார் பாதை அருகே நடிகர் மன்சூர் அலிகானுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 2,400 சதுர அடியை ஆக்கிரமித்து, இந்த வீட்டைக் கட்டியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அதிகாரிகள் அந்த வீட்டைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். மாநகராட்சி சார்பில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் 2,400 சதுர அடி நிலத்தை அப்பாவு, அவரின் மகன் பாரி என்பவர்கள் தன்னிடம் விற்றதாகவும் அதற்குப் பின்னர்தான் அது புறம்போக்கு நிலம் என்பதும் தெரியவந்ததாகவும், தன்னிடம் நிலத்தை விற்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த 2019-ம் ஆண்டு மன்சூர் அலிகான் புகார் அளித்திருந்தார். நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடியும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் அந்த மண்டல மாநகராட்சி அதிகாரிகள் நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்குச் சீல் வைத்தனர்.