மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், நேற்று உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், வைகோ மகன் துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மதிமுகவிலும் வாரிசு அரசியல் தலை தூக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Also Read: மதிமுக: `தலைமைக் கழகச் செயலாளராகிறார் துரை வையாபுரி; அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வைகோ!’
இந்நிலையில், துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்னைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன்.
எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும், ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும், மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது.
இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும் எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத்தொடங்கும் போது, நான் இங்கு இயங்குவது இயக்கத்திற்கும் நல்லதல்ல . எனக்கும் நல்லதல்ல . எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது.
அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும்.
தலைவர் வைகோ என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது.அதை என்னால் வெட்ட இயலவில்லை. என் தலைவரா? அவர் விதைத்த கொள்கையா? என்ற போராட்டத்தில் அவரின் கொள்கையே என்னை ஆட்கொண்டுவிட்டது.
கனத்த இதயத்தோடு இமைப்பொழுதும் என்னை நீங்கா என் தலைவரின் இயக்கமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.