குஜராத் மாநிலம் சூரத்தில் பேக்கேஜிங் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
சூரத் நகரின் கடோதரா பகுதியில் வரேலி எனுமிடத்தில் தனியாருக்கு சொந்தமான பேக்கேஜிங் தொழிற்சாலை ஒன்றி இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது ஆலையில் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் விரைவாக அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்று தப்பினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடியில் நின்று கொண்டிருந்த பணியாளர்களை ஹைட்ராலிக் கிரேன் உதவியுடன் மீட்டனர். இதுவரை 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”ஆலையின் முதல் தளத்தில் தீப்பிடித்து விரைவில் மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும்” என்று கூறினர்.