நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும் பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திரப் பிரமுகர்களில் ஒருவருமான மதுவந்தியின் சென்னை வீட்டை ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று முடக்கியிருக்கிறது.
‘’சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் மதுவந்திக்குச் சொந்தமாக ஒரு ஃபிளாட் உள்ளது. இந்த வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறார் மதுவந்தி. ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கித்தான் இந்த வீட்டை மதுவந்தி வாங்கியதாகச் சொல்கிறார்கள். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த மதுவந்தி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த சில வருடங்களாகவே ஃபைனான்ஸ் நிர்வாகம் கடனைச் செலுத்தும் படி வலியுறுத்தி வந்த போதும், காதில் வாங்கிக் கொள்ளவே இல்லையாம் மது.
மத்தியில் ஆளும் கட்சியில் இருப்பதால் தீவிர நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டி வந்திருக்கிறார்கள் நிறுவன அதிகாரிகள்” என்கிறனர் அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர்.
இந்நிலையில், சமீபத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரி, ‘’கடன் வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்தாக வேண்டும்’’ என்பதில் உறுதியாக இருந்ததுடன் நேற்று பிற்பகல் மதுவந்தியின் வீட்டுக்குள் தடாலடியாக அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
ஜப்தி நடவடிக்கைக்குச் சென்றவர்கள் மதுவந்தியின் வீட்டிலிருந்து பொருட்களை வெளியில் எடுத்து வைத்ததுடன் ஜப்திக்குள்ளான விபரத்தை நோட்டீஸாகவும் ஒட்டிச் சென்றுள்ளார்களாம்.
இந்த ஜப்தி நடவடிக்கை குறித்து மதுவந்தியிடமே கேட்டோம். ‘’உங்க வீடு ஜப்தி’’ என நாம் ஆரம்பித்ததுமே, முழுதாகக் கேட்காமல், ‘’அந்த மாதிரியெல்லாம் எதுவும் இல்லீங்க, ஃபேக் நியூஸ்’’ என்றபடி நம் அழைப்பை துண்டித்து விட்டார்!