2013-ம் வருடத்திலிருந்து நான் ILD எனப்படும் Interstitial Lung Disease நோயாளி. 2020-ல் எனக்கு கொரோனா வந்தது. அதிலிருந்து குணமான பிறகு என்னால் ஆக்ஸிஜன் சப்போர்ட் இல்லாமல் வாழ முடியவில்லை. ஓய்வில் இருக்கும்போது 5 லிட்டர், சின்ன சின்ன வேலைகள் செய்யும்போது 6.5 லிட்டர் ஆக்ஸிஜன் உபயோகிக்கிறேன். எப்போதும் களைப்பாக உணர்கிறேன். என் நுரையீரலின் செயல்திறனை அதிகப்படுத்த முடியுமா?
– வருண் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
“ஏற்கெனவே ஐஎல்டி மாதிரியான பாதிப்பு உள்ளவர்களுக்கு நுரையீரலின் திறன் இயல்பைவிட குறைவாகத்தான் இருக்கும். கோவிட் தொற்றின் பக்கவிளைவுகளும் இவர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு கோவிட் தொற்றின் தாக்கம் எந்த அளவுக்கு பாதித்தது என்று தெரியவில்லை. அதற்கு முன்புவரை உங்களுடைய நுரையீரல் திறன் எப்படி இருந்தது என்றும் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு கோவிட் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கலாம், அதன் தொடர்ச்சியாக நீங்கள் ஆக்ஸிஜனை சார்ந்திருக்கும் நிலை தொடரலாம் என்று தெரிகிறது.
உங்களுடைய நுரையீரலின் செயல்திறன் மற்றும் அதிலுள்ள பாதிப்புகளை முதலில் பார்க்க வேண்டும். தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தாலோ, நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளில் சரியாகவில்லை என்றாலோ வேறு மருந்துகள் கொடுத்துப் பார்க்கலாம். அதிலும் பலனில்லை என்றால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் யோசிக்கலாம். ஆனால் இது பொதுவான விளக்கமே தவிர, உங்களுடைய கேள்வி பலதரப்பட்ட சிக்கல்களை உள்ளடக்கிய ஒரு பிரச்னையாக இருக்கிறது.
Also Read: Covid Questions: கொரோனா குணமானதற்குப் பிறகு அடிக்கடி சளி பிடிக்கிறது; காரணம் என்ன?
பொதுவான சிகிச்சையோ, ஆலோசனைகளோ உங்களுக்கு உதவாது. எனவே நீங்கள் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் மருத்துவரிடமே அடுத்தகட்ட சிகிச்சை பற்றி ஆலோசிப்பதுதான் சரியானது.”
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!