சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவு தர கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும், அதனடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அரசாங்கமே சாதிவாரியான கணக்கெடுப்பினை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்கவேண்டும் என்ற குரல் இந்திய அளவில் மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வலுத்து வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு கட்சிகளும் இந்த கோரிக்கைக்காக குரல் எழுப்பி வருகின்றன.
அதேநேரம், சாதிவாரியான கணக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் சாதிரீதியான கட்டமைப்பு மேலும் கூர்மைபெறும் வாய்ப்பு உருவாகும், சாதிவாரி கணக்கெடுப்பை கையில் வைத்துக்கொண்டு அரசியல் ரீதியான பேரம் பேசும் வாய்ப்புகளும் ஏற்படும், இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமற்றது என்று இதற்கு எதிரான குரல்களும் ஒலிக்கின்றன.
தொடர்புடைய செய்தி: சாதிவாரி கணக்கெடுப்பு: வலுக்கும் குரலும், மத்திய அரசின் அணுமுறையும் எத்தகையது?
இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவிப்பவரான பீகார் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், நாடு முழுவதுமுள்ள 33 முக்கிய கட்சி தலைவர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். முன்னதாக ‘சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது இயலாது காரியம்’ என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.