கேரளாவில், சிறுமி ஒருவர் சாமியாரால் சிறார் வதை செய்யப்பட்ட வழக்கின் மீது நடத்திய விசாரணையின் போது நீதிபதி, `எந்தக் கடவுள் இதுபோன்ற ஒரு சாமியாரின் காணிக்கையை ஏற்றுக்கொள்வார்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன் மூன்று குழந்தைகளுடன் சாலையில் சுற்றித் திரிந்துள்ளார். இதனை கண்டவர்கள், பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பரான வனிதா செல்லிற்கு தகவல் அனுப்பியுள்ளனர். வனிதா செல்லைச் சேர்ந்தவர்கள் தாயையும் பிள்ளைகளையும் மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது, அந்தப் பெண்ணின் முதல் குழந்தைதான் ஒரு சாமியாரால் சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்ட அவலத்தைத் தெரிவித்தது.
Also Read: மும்பையில் 15 வயது சிறுமியை மிரட்டி 29 பேர் கூட்டு சிறார் வதை; 26 பேர் கைது!
முன்னதாக, கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தன் மூன்று குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் சாமியார் ஒருவர் அவர்களை கவனித்துக் கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அப்பெண்ணின் முதல் குழந்தையான சிறுமியை, குழந்தையின் அம்மா, தம்பி, தங்கையின் முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் சிறார் வதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். பள்ளிக்குச் சென்று வந்து கொண்டிருந்த சிறுமியை, நடப்பதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியும் உள்ளார்.
சாமியாரின் மீது காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் கருத்துக் கூறிய நீதிபதி, “ஒரு ஆண் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கைவிடும்போது, அந்தப் பெண்ணை மட்டுமல்ல, ஆதரவற்றுப் போகும் அந்தக் குழந்தைகளையும் இரையாக மாற்ற இந்தச் சமூகத்தில் கழுகுகள் காத்திருக்கின்றன.
Also Read: ஆவி விரட்டுவதாகக் கூறி சிறுமியை சிறார் வதை செய்த சாமியார்; துணை போன அம்மா கைது!
இந்த வழக்கில், ஒரு சிறுமி, தன் ஆதரவற்ற, மனநலம் பாதிக்கப்பட்ட தாய், மற்றும் தன் தம்பி, தங்கைகளின் முன்னிலையில் ஒரு சாமியாரால் சிறார் வதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அத்தகைய சாமியாரின் வணக்கத்தையும், காணிக்கையையும் எந்தக் கடவுள் ஏற்றுக்கொள்வார்? அவரை எப்படி கடவுளின் ஊடகமாக மாற்றுவார்?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது நிரூபிக்கப்படாததால், சிறார் வதை செய்த சாமியாரின் மீது போக்ஸோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 376(2) பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர முடியவில்லை. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 376(1) கீழ் வழக்குத் தொடரப்பட்டு, சாமியாருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.