அபுதாபியில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை சேர்த்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து டெல்லி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பார்திவ் படேல் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் 8 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்கு 2 விக்கெட் என பரிதாப நிலையில் இருந்த டெல்லியை ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பன்ட்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டனர்.
இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தபோது, அணியின் ஸ்கோர் 83 ஆக இருந்தது. அந்த நேரத்தில் டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மிகுந்த பொறுப்புணர்வுடன் விளையாடினர். ஆனால் 42 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் டெவாட்டியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அதன்பின்பு ஹெட்மெயர் அதிரடியாக விளையாடினார். எப்படியும் டெல்லி அணி 150 ரன்களை தொடும் என எண்ணியிருந்தபோது ஹெட்மெயர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு களத்தில் இருந்த லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல், அணிக்கு தேவையான ரன்களை வேகமாக குவிக்க தடுமாறினர். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் முஸ்தபிஸூர் ரஹ்மான், சேட்டன் சக்காரியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் டெவாட்டியா, ஷம்சி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.