வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு குலாப் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம். இந்த புயல் நாளை தெற்கு ஒடிஷா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிட்டுள்ளனர்.
இது பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். வங்கக்கடலில் செப்டம்பர் மாதத்தில் புயல் உருவாவது அரிதான ஒன்று. கடந்த 2005ஆம் ஆண்டு பியார் என்ற புயலும் , 2018ஆம் ஆண்டு டாயி என்ற புயலும் உருவானது. தற்போது மூன்றாவதாக குலாப் என்ற புயல் உருவாக உள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.