நடிகர் விஜய், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளதை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் விஜய் டெல்லி சென்றது அவரின் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஒரே சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், வழக்கு ஒன்றிற்காக ஆலோசனை நடத்த சென்றதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

விஜய்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் அதன் நிவாகிகள் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். விஜய் மக்கள் இயக்க கொடி மற்றும் விஜய் போட்டோ ஆகியவற்றை பயன்படுத்தி தேர்தலில் எதிர்கொள்ள விஜய் ஒப்புதல் கொடுத்து விட்டார். அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி.ஆனந்த் நிர்வாகிகளிடம் கூறியுள்ளாராம்.

விஜய் மறைமுகமாக அனுமதி கொடுத்ததை மக்கள் இயக்க நிர்வாகிகள் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். பட்டுக்கோட்டையில் நகரத் தலைவரான ஆதி.ராஜாராம் மணி கூண்டு பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி இதனை வரவேற்று கொண்டாடினார். அப்போது 2021-ல் உள்ளாட்சி தேர்தல், 2026ல் சட்டமன்ற தேர்தல் புலி பாய்வதற்கு தயாராகி விட்டது என கோஷம் எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட அந்த இடத்தில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தான் இது வரை அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தியுள்ளன. தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் களத்தில் இறங்கி பெரிய கட்சிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என காட்டியுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் இனிப்பு வழங்கி கொண்டாடும் நிர்வாகிகள்

இந்நிலையில் நடிகர் விஜய் நேற்று முந்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் புஸ்ஸி.ஆனந்தும் சென்ற நிலையில் நேற்று முந்தினம் இரவு புஸ்ஸி.ஆனந்த் மட்டும் சென்னை திரும்பி உள்ளாராம். விஜய் அங்கேயே தங்கி பீஸ்ட் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்த பிறகு மக்கள் இயக்க பொதுச்செயலாளருடன் விஜய் டெல்லி சென்றது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் மூடுக்கு வந்து விட்டார். அது தொடர்பான பணிகளுக்காகவே டெல்லி சென்றதாகவும், ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் ஒரே சின்னம் பெறுவதற்காக தலைமை தேர்தல் ஆணையத்தை அணுகவே சென்றதாகவும் நிர்வாகிகள் மத்தியில் பலரும் பல விதமாக பேசி பரபரப்பை கூட்டி வருகின்றனர். அவை ஒரு புறம் இருந்தாலும் வேட்பு மனு தாக்கல், பிரசாரம் என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெரிய கட்சிகளுக்கு டப் கொடுக்க கூடிய வகையில் முனைப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளனர்.

தேர்தல் வேட்புமனு தாக்கல்

தேர்தலில் போட்டியிட ஒப்புதல் வழங்கிய விஜயினை பாராட்டி நாளை நமதே, போட்டியிடும் வேட்பாளர்கள் இங்கே… ஒரே சின்னம் பெறுவதற்கு விஜய் அங்கே!, ரீல் ஹீரோ இல்லை ரியல் ஹீரோ, உள்ளாட்சியில் நல்லாட்சி போன்ற பல பஞ்ச் டயலாக் வாசகங்கள் அடங்கிய கார்டை சமூக வலைதளங்களில் பரப்பி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இது குறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரப்பில் பேசினோம், `எடுத்தோம் கவிழ்த்தோம் என இல்லாமல் எதையும் நிதானமாக செய்யகூடியவர் தளபதி விஜய். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வர நினைத்து அதற்கான அடித்தளத்தை பொறுமையாக அமைத்திருக்கிறார். பெரிய கட்சிகளுக்கு உரிய அனைத்து கட்டமைப்பும் விஜய் மக்கள் இயக்கத்திற்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

விமானத்தில் டெல்லி சென்ற விஜய்

இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேரடியாக அனுமதி கொடுக்காமல் புஸ்ஸி.ஆனந்த் மூலமாக ஒப்புதல் வழங்கியதுடன் இந்த பணிகளை செயல்படுத்த அவரை நியமனம் செய்திருக்கிறார். பெரிய கட்சிகள் வேட்பாளர் லிஸ்டை அறிவிக்கும் போதே, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கி விட்டதுடன், பிரசாரத்தையும் ஸ்டார்ட் செய்து விட்டனர். புஸ்ஸி.ஆனந்த், `தளபதி நம்ம மேல மிகுந்த நம்பிக்கையினை வைத்துள்ளார். அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான வெற்றியினை பெற வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார்.

Also Read: ‘வாத்தி கம்மிங்?’ ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டும் விஜய்?

தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் டெல்லி சென்றுள்ளார். அவர் செல்வதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அவர் கூட புஸ்ஸி.ஆனந்த் அண்ணனையும் அழைத்து சென்றதைதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்காக செல்வதாக வெளியே தெரியபடுத்தினாலும் ஆனந்த் அண்ணனை ஷூட்டிங்கிற்கெல்லாம் அழைத்து சென்றது இல்லை.

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் பெற சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் விஜய் மக்கள் இயக்க பெயர் அதன் கொடி ஆகியவற்றை பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாட்டை செய்தார். தன்னுடைய பெயர், போட்டோ, கொடி ஆகியவற்றை பயன்படுத்த கூடாதுனு அப்போது விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதற்கான விசாரணை வரும் 27-ம் தேதி வர இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பான ஆலோசனைக்காகவும் புஸ்ஸி. ஆனந்தையும் அழைத்து சென்றிருக்கலாம். வழக்கமாக புஸ்ஸி. ஆனந்த் விஜயுடன் எங்கு சென்றாலும் ஓப்பனாக முக்கிய நிர்வாகிகள்கிட்ட சொல்லிட்டு தான் செல்வார். இந்த முறை விஜயுடன் அவர் சென்று வந்தது ரகசியமாகவே வைத்திருந்தார்.

விஜய்

உள்ளாட்சித் தேர்தல் மூலம் விஜய் தனக்கான பலம் என்ன மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்ப்பு எப்படியிருக்கிறது என்பதை அறிய நினைக்கிறார். அதற்காகவே தன் போட்டோ, கொடி ஆகியவற்றை பயன்படுத்தி தேர்தலை எதிர்கொள்ளவும் அனுமதியளித்திருக்கிறார். அதன் பிறகு வர இருக்கும் மாநகராட்சி, நகராட்சி தேர்தலைகளையும் சந்திக்க தயாராக இருக்க சொல்லி நிர்வாகிகளுக்கு தலைமையிலிருந்து மறைமுக உத்தரவு வந்திருக்கிறது.

Also Read: `உதயநிதி Vs விஜய்’ – தயாராகும் தேர்தல் களம்?

அதன் முடிவுகளை பார்த்த பிறகு விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார் என நினைக்கிறோம். இவை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று தான். அதற்கான முயற்சி மற்றும் முன்னெடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

விஜய் தரப்பிற்கு நெருக்கமான வட்டாரமோ, பீஸ்ட் ஷீட்டிங்கிற்காகவே விஜய் டெல்லி சென்றுள்ளார். வேறு சில பணிகள் இருந்ததால் அவருடன் புஸ்ஸி.ஆனந்தும் சென்றார். உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுவதால் இவை பெரிதாக பார்க்கபடுவதாக முடித்து கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.