கொரோனா பரவல் அபாயத்தால் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி உள்ளது. இரண்டாவது பாதி தொடக்கத்தின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.
ஆனால் சென்னை அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஆட்டத்தில் துவக்கத்தை கொடுக்க தவறினர். டூப்ளசிஸ், மொயின் அலி, ரெய்னா, தோனி என நான்கு விக்கெட்டுகளை பவர் பிளே ஓவர்களில் இழந்திருந்தது சென்னை அணி. இதில் இரண்டு பேர் டக் அவுட். ரெய்னா 4 ரன்களிலும், தோனி 3 ரன்களிலும் வெளியேறினர்.
மும்பை அணி சார்பில் போல்ட் மற்றும் மில்னே என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் பவர் பிளேயில் சென்னை அணியை அப்செட் செய்தனர். இதில் அவர்களுக்கு போனஸாக ராயுடு, ரிட்டயர்ட் ஹெர்ட் முறையில் வெளியேறி இருந்தார். மில்னே வீசிய பந்து அவரை பதம் பார்த்தது.
இருந்தாலும் சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் நிதான ஆட்டம் ஆறுதலாக இருந்தது. 58 பந்துகளில் 88 ரன்கள் சேர்த்து அசத்தினார் அவர். தொடக்கத்தில் நிதானம் காட்டிய அவர், கடைசி நேரத்தில் எல்லைக்கோட்டை நோக்கியே பந்துகளை விராட்டினார். 9 பவுண்டரி, 4 சிக்சர் என தனது திறனை நெருக்கடியான நேரத்தில் டெலிவர் செய்தார் ருதுராஜ். இறுதி வரை அவுட்டாகாமல் இருந்த அவர் கடைசி பந்தில் சிக்சர் விளாசி அசத்தினார். அதுவும் பும்ரா ஓவரில்.
அவருக்கு ரவீந்திர ஜடேஜா நல்ல கம்பெனி கொடுத்தார். 33 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஜடேஜா வெளியேறினார். தொடர்ந்து பிராவோ கிரீஸூக்கு வந்தார். அவர் தன் பங்கிற்கு மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். 8 பந்துகளில் 23 ரன்களை எடுத்து அவுட்டானார் பிராவோ.
12,16, 18, 19 மற்றும் 20 -வது ஓவர்களில் மட்டுமே சென்னை அணி 10 ரன்களுக்கு மேலாக சேர்ந்துள்ளது. மற்ற அனைத்து ஓவர்களும் ஒற்றை இலக்கத்தில் ரன்கள் எடுக்கப்பட்டன. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 157 ரன்களை எடுக்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தது. டு பிளசிஸ், மொயின் அலி, அம்பத்தி ராயுடு, ரெய்னா, தோனி என 5 வீரர்கள் மொத்தம் சேர்த்து 7 ரன்கள் தான் எடுத்தனர். 24 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய சிஎஸ்கே இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது.
இதையும் படிக்கலாம் : சர்ச்சையான ’AUKUS’ உடன்படிக்கை : அமெரிக்கா-ஆஸி.-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே என்ன சிக்கல்?