சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் துவங்கியுள்ளது.
‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததால் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புத் துவங்கியது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த இப்படத்தின் 51 நாட்கள் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் துவங்கியுள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.