வெடிப்பொருள்களை உபயோகிப்பதால் காற்று மாசுபாடு ஏற்பட்டு, அதனால் உடல்நலக்கேடு உண்டாகும் என வலியுறுத்தி, டெல்லி அரசு இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டத்தின்போது மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. பட்டாசு பொருள்கள் மீதான விற்பனை மற்றும் கிடங்குகளில் இருப்பு வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு உபயோகத்துக்கு தடை விதிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த வருடமும் அது தொடர்ந்திருக்கிறது. பசுமை பட்டாசு என விலக்கு அளிக்காமல், ஒட்டுமொத்த பட்டாசு விற்பனை மற்றும் உபயோகத்துக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை, கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் சிவகாசி மற்றும் விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு உற்பத்தியாளர்களை பாதித்ததுபோலவே மீண்டும் இந்த ஆண்டும் பாதிக்கும் என கருதப்படுகிறது. சென்ற வருடம் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பட்டாசு விற்பனை டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மிகவும் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் முதல் வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி அரசு இந்த வருடம் முன்கூட்டியே பட்டாசு தடையை அறிவித்துள்ளது. சென்ற வருடம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டபோது, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே பட்டாசுகளை கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளதால், கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் வலியுறுத்தியிருந்தனர். அதனாலேயே இந்தவருடம் டெல்லி அரசு முன்கூட்டியே தடையை அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை தடுக்க முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடப்படுவதாக கெஜ்ரிவாலும் விளக்கியுள்ளார்.
पिछले 3 साल से दीवाली के समय दिल्ली के प्रदूषण की खतरनाक स्तिथि को देखते हुए पिछले साल की तरह इस बार भी हर प्रकार के पटाखों के भंडारण, बिक्री एवं उपयोग पर पूर्ण प्रतिबंध लगाया जा रहा है। जिससे लोगों की जिंदगी बचाई जा सके।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 15, 2021
சென்ற வருடம் பொதுமுடக்கம் காரணமாக சென்ற வருடம் காற்று மாசு கோடை காலத்தில் குறைந்தாலும், பின்னர் பயிர்கழிவு எரிப்பு காரணமாக அதிகரித்தது. ஆகவே காற்று மாசுபடுவதை தடுக்க இவ்வருடத்தில் பயிர் கழிவுகளை எரிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ள டெல்லி அரசு, விவசாயிகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கும் மாநிலங்கள்: கேள்விக்குறியாகும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
பல வருடங்களாக நீதிமன்றங்களில் பட்டாசு தடை தொடர்பான வழக்குகள் நடைபெற்ற நிலையில், டெல்லி அரசு தொடர்ந்து பட்டாசுக்கு தடை விதித்து வருகிறது. இந்த வருடம் அடிக்கடி மழை பொழிந்தததால், தற்போது காற்று மாசு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– கணபதி சுப்ரமணியம்