அதிமுக கூட்டணியின்றி பாமக தனித்து போட்டி
9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி. கட்சியின் வளர்ச்சி கருதி முடிவெடுக்கப்பட்டதாக பா.ம.க அறிக்கை.
திமுக சார்பில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிப்பு!
மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரு வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்திருக்கிறது. அதன்படி, திமுக சார்பில் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜேஷ்குமார் நாமக்கல் மாவட்டம், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார். முன்னதாக நடைபெற்ற ஓர் இடத்துக்கான தேர்தலில், திமுக சார்பில் அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
கொடநாடு வழக்கு: வாளையார் மனோஜ் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி நீதிபதி உத்தரவு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீன் கிடைத்தும் ஷூரிட்டி கிடைக்காமல் இரண்டு மாதங்களாக சிறையிலிருக்கும் வாளையார் மனோஜ், தனது ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இரண்டாவது நாளாக இந்த மனு மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது. ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த கூடாது என நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே வாளையார் மனோஜின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தி உத்தரவிட்டார் நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா. இதன் மூலம் கேரளாவில் இருக்கும் உறவினர்களும் அவருக்கு ஷூரிட்டி வழங்கலாம்.
– சதீஷ்
தமிழக ஆளுநராக வரும் 18 -ம் தேதி பதவியேற்கிறார் ஆர்.என் ரவி!
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி, வரும் 18 -ம் தேதி பதவியேற்கவிருக்கிறார். சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.